அட்டகாச வெற்றி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணி 2020 ஐபிஎல் தொடரில் தன் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 163 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் விக்கெட்களை இழந்து தடுமாறியது.
நம்பிக்கை
இறுதியில் ஹைதராபாத் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே வென்றதால் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது.
உமேஷ் யாதவ்
முதல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எல்லாம் சரியாக அமைந்தது, ஒரு வீரரைத் தவிர. அவர் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ். ஹைதராபாத் அணி சோர்ந்த போதெல்லாம் உமேஷ் யாதவ் பவுண்டரி அடிக்க எளிதாக பந்துவீசி அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
பாதிப்பு ஏற்படும்
4 ஓவர்களில் உமேஷ் யாதவ் 48 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதே நிலை அடுத்த போட்டிகளிலும் நீடித்தால் நிச்சயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வெற்றி நடையைத் தொடர முடியாது. எனவே, அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
முகமது சிராஜ்?
அவரை நீக்கினால், வெளிநாட்டு வீரரை அவருக்கு மாற்றாக நியமிக்க முடியாது. அது அணியின் நான்கு வெளிநாட்டு வீரர்கள் யார் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். மற்ற வீரர்களை மாற்றாமல், உமேஷ் யாதவ்வை நீக்க வேண்டும் என்றால் இந்திய வீரர் முகமது சிராஜ் மட்டுமே கோலிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.
குழப்பத்தில் கோலி
முதல் போட்டியில் வென்ற அணியை பெரிய அளவில் மாற்றினால் அது வீரர்கள் இடையே நம்பிக்கையை குறைக்கும். அதனால், உமேஷ் யாதவ் ஒரு போட்டியில் தவறு செய்து இருக்கும் நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பதா அல்லது முகமது சிராஜ்-ஐ அணியில் தேர்வு செய்வதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் கேப்டன் விராட் கோலி.