எல்லை மோதல்
இந்தியா - சீனா இடையே எல்லை மோதல் காரணமாக சில வாரங்களாக இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். அப்போது முதல் சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு எதிர்ப்பு
சீன நிறுவனங்களுக்கு எதிராக, சீன பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராகவும் மக்கள் சிலர் குரல் கொடுக்கத் துவங்கினர். அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு சில சீன மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது.
ஐபிஎல் தொடர்
இந்த நிலையில், மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு பெரும் போராட்டத்துக்குப் பின் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சீன நிறுவனங்களின் விளம்பரங்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனம் எழுந்தது.
டைட்டில் ஸ்பான்சர்
ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் விவோ இந்தியா நிறுவனம் ஆகும். இது நேரடி சீன நிறுவனமான விவோவின் கிளை நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பரத்தை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. ஐபிஎல் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என பலரும் அழுத்தம் கொடுத்தனர்.
கடும் எதிர்ப்பு
இந்த நிலையில், ஞாயிறு அன்று நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் சீன நிறுவனங்களுடன் தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த இரண்டு நாட்களாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல்-ஐ விமர்சித்து பலரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.
தொடரை புறக்கணிக்க வேண்டும்
ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சுவதேசி ஜக்ரான் மன்ச் விவோ நிறுவனத்தின் விளம்பரத்தை ஐபிஎல் அனுமதித்தால், அந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என அதிரடியாக கூறி இருந்தது. இது போன்ற அழுத்தங்கள் பெருகி வந்த நிலையில், பிசிசிஐ என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழுந்தது.
விலகல்
தற்போது விவோ இந்தியா நிறுவனம் தாமாகவே டைட்டில் ஸ்பான்சராக இருப்பதில் இருந்து விலகி உள்ளது. இது நிரந்தரமான விலகலா? அல்லது இந்த ஆண்டு மட்டும் விவோ இந்தியா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதில் இருந்து விலகி உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது.
தற்காலிகம்
ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் விவோ நிறுவனத்தின் விலகலை உறுதி செய்துள்ளார். அதே சமயம், அனைத்து ஸ்பான்சர்களும் எங்களுடனே உள்ளனர் என சூசகமாக கூறி உள்ளார். அதன் மூலம், விவோ இந்தியா தற்காலிகமாக மட்டுமே விலகி உள்ளதாக தெரிகிறது.
440 கோடி
கடந்த 2017ஆம் ஆண்டு விவோ இந்தியா நிறுவனம், ஐபிஎல்-உடன் ஐந்து ஆண்டுகளுக்கு விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டது. 2199 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 440 கோடி ரூபாய் பிசிசிஐக்கு விளம்பர வருவாய் கிடைக்கும்.
தேடல்
தற்போது விவோ இந்தியா நிறுவனம் விலகி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் ஐபிஎல்-லுக்கு அடுத்த ஸ்பான்சரை தேடும் முயற்சியில் இறங்கி உள்ளது பிசிசிஐ.