2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் நடைபெறவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருப்பதால் அங்கே தொடர் மாற்றப்பட்டது. ஐபிஎல் அணிகளுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்களை வைத்துக் கொள்ள பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆகஸ்ட் 20, 21 தேதிகளில் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களை சென்று அடைந்தன. அனைத்து அணிகளும் ஒரு வாரம் குவாரன்டைனில் இருந்தன. அப்போது அனைத்து வீரர்களுக்கும் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
பயிற்சி செய்யத் துவங்கவில்லை
துபாயில் தங்கி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெள்ளிக்கிழமை அன்று தன் பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், மற்ற அணிகள் பயிற்சி செய்யத் துவங்கி உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மட்டும் பயிற்சி செய்யத் துவங்கவில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்த நிலையில், சிஎஸ்கே அணி செப்டம்பர் 1 வரை குவாரன்டைனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து அதிர்ச்சி செய்தியாக சிஎஸ்கே அணி வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இருவர்
அந்த ஒரு வீரர் ஒரு வேகப் பந்துவீச்சாளர் என முதலில் தெரிய வந்தது. தற்போது அந்த வீரர் இந்திய அணியில் சமீபத்தில் இடம் பெற்ற வேகப் பந்துவீச்சாளர் என கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியில் அப்படி இருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியில்..
அந்த இரண்டு வீரர்கள் தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்குர். தீபக் சாஹர் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்துல் தாக்குரும் கடந்த ஆண்டு இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.
தோனியுடன் தீபக் சாஹர் நெருக்கம்
இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இதில் தீபக் சாஹர் சென்னை பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருடன் நெருக்கமாக நின்று கொண்டு இருந்த புகைப்படங்கள் கூட வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் கலக்கம்
அதனால், ரசிகர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு இந்திய வேகப் பந்துவீச்சாளர் தவிர மேலும் சிஎஸ்கே குழுவில் வீரர்கள் அல்லாமல் இடம் பெற்றுள்ள 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அதில் மூத்த அதிகாரி ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் பாதிப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
எப்போது வெளியே வரலாம்?
தற்போது சிஎஸ்கே அணி வீரர்கள் துபாயில் ஹோட்டலில் தனிமையில் உள்ளனர். செப்டம்பர் 1 வரை அவர்கள் குவாரன்டைனில் இருப்பார்கள். அதன் பின் என்ன நடக்கும்? என்பது மர்மமாக உள்ளது. எத்தனை முறை நெகடிவ் முடிவு வந்தால் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி செய்ய வெளியே வரலாம்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.