நேற்று எப்படி
நேற்று ராஜாஸ்தான் அணிக்காக ராகுல் திவாதியா பேட்டிங் இறங்கும் போதே பலரும் அவரை கிண்டல் செய்தனர். அணியில் நிறைய ஹிட்டர்கள் இருக்கும் போது ராகுல் திவாதியாவை இறக்கியது ஏன் என்று எல்லோரும் கேள்வி எழுப்பினார்கள். இது தவறான முடிவு என்றும் கூட விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
மிக மோசம்
அதேபோல் தொடக்கத்தில் இறங்கியதில் இருந்தே ராகுல் திவாதியா மிக மோசமாகவே பேட்டிங் செய்தார். 0, 1, 0, 0, 0, 1, 1, 1, 1, 0, 0, 0, 0, 0, 1, 1, 1, 0, 0.. இதுதான் தொடக்கத்தில் அவர் அடித்த ரன்கள். இதை பார்த்து பலரும் ராகுல் திவாதியாவை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். ராஜஸ்தானின் விஜய் சங்கரே.. பிங்க் சட்டை போட்ட முரளி விஜயே நீ நீடுழி வாழ்க என்று கடுமையாக கிண்டல் செய்தனர்.
தூங்கினார்
பெரிய அளவில் ஹிட் எதுவும் அடிக்காமல் டொக் வைத்து ஆடினார். அவர் எதிர்கொண்ட முதல் 23 பந்துகளில் 17 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் ராஜஸ்தான் தோல்வி அடைய போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அடுத்த நொடியில் அஜித் வேதாளம் படத்தில் ''டிரான்ஸ்பார்ம்'' ஆவது போல அப்படியே தனக்குள் தூங்கிக் கொண்டு இருந்த பினிஷர் தோனியை தட்டி எழுப்பினார்.
மாஸ் ஆட்டம்
கடைசி மூன்று ஓவரில் ராஜஸ்தானுக்கு 51 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது அதிரடியாக 6, 0, 2, 1, 6, 6, 6, 6, 0, 6, 6, 0 என்று மொத்தமாக என்று சிக்ஸர் மழை பொழிந்தார். சிக்ஸ் மூலம் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். இவர் காட்ரலின் ஒரே ஓவரில் 30 ரன்கள் எடுத்தார். இதனால் மொத்தமாக போட்டி மாறி, கடைசி நொடியில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது.
யார் இவர்
இந்த போட்டி முடிந்ததில் இருந்து பலரும் யார் இந்த ராகுல் திவாதியா என்று தேடி வருகிறார்கள்.
ஹரியானாவை சேர்ந்த இவர் லெக் ஸ்பின் ஆல் ரவுண்டர். பெரிய அளவில் கிரிக்கெட் பின்னணியை சேராதவர். ஹரியானா கிரிக்கெட் அணியே இவரை பெரிய அளவில் மதித்தது இல்லை. முதல தர போட்டிகளில் இவர் 7 போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார்.
சில போட்டிகள்
2014ல் ரஞ்சி போட்டிகளில் ஹரியானா அணிக்காக விளையாடினார். அதன்பின் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் ஹரியானா அணிக்காக விளையாடினார். முதல் தர போட்டிகளில் இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 91 தான். இதனால் இவரை இந்திய அணியின் தேர்வு குழுவில் பெரிய அளவில் யாரும் கவனிக்கவில்லை.
ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் போட்டிகளிலும் இவர் இதுவரை பெரிய அளவில் வாய்ப்புகளை பெறவில்லை. 2014ல் இவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 3 போட்டிகளில் மட்டும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2017ல் இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அங்கும் அவருக்கு 3 போட்டிகளில் விளையாட மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்டார்
டெல்லி அணிக்காக 2018ல் இவர் விளையாடினார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 2019ல் இவர் மீண்டும் ராஜஸ்தான் வந்தார். ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபிக்க 6 வருடம் முயன்று இருக்கிறார். ஆனால் இவரை எந்த அணி நிர்வாகமும் சரியாக பயன்படுத்தவில்லை.
27 வயது
கிரிக்கெட் உலகில் என்னை புறக்கணிக்கிறார்கள், தொடர்ந்து பல அணிகளுக்கு மாறுவதால் என்னை நிரூபிக்க முடியவில்லை என்று இவரே ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இந்த முறை தன்னை ஐபிஎல் போட்டிகளில் நிரூபிக்க தொடங்கி உள்ளார். 6 வருடமாக இருந்த வலியை கிரிக்கெட்டை நோக்கி திருப்பி உள்ளார்