நஷ்டம்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அந்த தொடரை ரத்து செய்தால் சுமார் 4000 முதல் 5000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்பதால் போராடி செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் தொடரை துவக்க பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.
ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ள தொடர் என்பதால் நேரடியாக போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. அதனால் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பல கோடி ரூபாய் வருவாயை இழக்கும் நிலை உருவாக்கி உள்ளது.
செலவினங்கள் அதிகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் எனும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த சீசன் முழுவதும் நடைபெற உள்ளது. இந்தியாவில் போட்டிகளை நடத்துவதை விட அந்த நாட்டிற்கு பயணம் செய்து ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான செலவினங்கள் அதிகம்.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை
இப்படி கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு வழிகளில் நஷ்டத்தை சந்திக்க உள்ளது ஐபிஎல். இதன் இடையே இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையும் ஐபிஎல்-லுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது பிசிசிஐ.
சீனாவுக்கு எதிரான மனநிலை
சில வாரங்கள் முன்பு நடந்த இந்தியா - சீனா எல்லை மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் பலியாகினர். அதைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான மனநிலை இந்திய மக்கள் இடையே பெருகி வருகிறது. சீன நிறுவனங்கள், பொருட்களை புறக்கணிக்கவும் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
புறக்கணிக்க வேண்டும்
ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சரான விவோ மொபைல், சீன நிறுவனம் என்பதால் பிசிசிஐ அதை புறக்கணிக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். எனினும், பிசிசிஐ அந்த நிறுவனத்தின் விளம்பரத்துடன் தொடரை நடத்த உள்ளதாக அறிவித்தது.
கடும் எதிர்ப்பு
பிசிசிஐ அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், விவோ நிறுவனம் தாமாகவே ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக இருப்பதில் இருந்து இந்த ஆண்டு மட்டும் விலகியது. இது பிசிசிஐக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
440 கோடி
விவோ மொபைல் நிறுவனம் 2017இல் ஐந்து ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சராக இருக்க ஐபிஎல்-உடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி ஆண்டுக்கு 440 கோடி ஐபிஎல்-லுக்கு கொடுத்து வருகிறது விவோ நிறுவனம். 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதால் அந்த வருவாயை இழக்கும் அபாயத்தில் உள்ளது பிசிசிஐ.
பொருளாதார மந்த நிலை
ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ள நிலையில் குறுகிய காலத்தில் அடுத்த ஸ்பான்சரை பிடிக்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறது பிசிசிஐ. தற்போது பொருளாதார மந்த நிலை இருப்பதால் 440 கோடி அளவுக்கு ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
300 கோடி கூட போதும்
பிசிசிஐ 250 முதல் 300 கோடிக்கு கூட ஸ்பான்சர் கிடைத்தால் போதும் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலையில், ரசிகர்கள் சிலர் பிசிசிஐக்கு இப்போது உதவக் கூடிய ஒரே நபர் முகேஷ் அம்பானி தான் என கேலியாக கூறி வருகின்றனர்.
ஜியோ
கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த போது பல ஆயிரம் கோடி முதலீட்டை பெற்ற ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே. எனவே, ஜியோ நிறுவனம் ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பு அதிகம் என ரசிகர்களே கூறி வருகின்றனர்.