உண்மை என்ன
நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி நடுவர்களிடம் சண்டை போட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சண்டைக்கான உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது. இந்த போட்டியில் சாஹர் போட்ட 18வது ஓவரில், டாம் கரன் பேட்டிங் செய்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது. டாம் பேட்டிங் செய்த போது, சாஹர் வீசிய பந்து, சாம் பேட்டில் பட்டது போல சத்தம் கேட்டது. இதை தோனி கேட்ச் பிடித்தார்.
நிலைமை என்ன
நடுவர் விக்கெட் கொடுத்தார். ஆனால் டாம் கரன் இது விக்கெட் இல்லை என்று கூறினார். அதோடு அவர் வெளியே செல்லவும் மறுத்தார். களத்தில் இருந்த இன்னொரு அம்பயரிடம் பேசி, விக்கெட் என்பதை நடுவர் உறுதி செய்தார். ராஜஸ்தான் அணியிடம் ரிவ்யூ மீதம் இல்லை. இதனால் டாம் கட்டாயம் வெளியேற வேண்டும் என்று நடுவர்கள் கூறிவிட்டனர்.
என்ன செய்தனர்
இந்த நிலையில்தான் டாம் பாதி தூரம் பெவிலியன் நோக்கி சென்ற போது, தோனி பிடித்த கேட்சை சோதனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து நடுவர்கள், மூன்றாம் நடுவரிடம் கேட்டனர். இதை மூன்றாம் நடுவர்கள் சோதனை செய்தனர். அதில், தோனி கேட்ச் பிடிக்கும் முன் பந்து பவுன்ஸ் ஆனதை கண்டுபிடித்தனர்.
பந்து பவுன்ஸ் ஆனது
இதனால் டாம் கரனுக்கு கொடுக்கப்பட்ட அவுட் திரும்ப பெறப்பட்டது. இங்குதான் தோனி இரண்டு விஷயங்களுக்காக நடுவர்களிடம் சண்டை போட்டு இருக்கிறார். முதல் விஷயம், பொதுவாக களத்தில் நடுவர் விக்கெட் கொடுத்து, அதை ரிவ்யூ செய்யவில்லை என்றால், அந்த விக்கெட்டை மாற்றும் அதிகாரம் மூன்றாம் நடுவருக்கு கிடையாது. வேண்டுமென்றால், கள நடுவர், உள்ளே சென்று, டிவியில் பார்த்து முடிவு எடுக்கலாம்.
ஆனால் முடியாது
ஆனால் மூன்றாம் நடுவரிடம் களத்தில் இருந்து கொண்டு நடுவர் இப்படி கேட்க கூடாது. விக்கெட் கொடுத்த பின் அதை மூன்றாம் நடுவர் மாற்ற முடியாது. ரிவ்யூ இருந்தால் மட்டுமே மாற்ற முடியும். இதை குறிப்பிட்டு தோனி வாக்கு வாதம் செய்துள்ளார். அடுத்து, தோனி நடுவர்களிடம், பந்து பேட்டில் படவில்லை. பேடில் பட்டுள்ளது. அப்படி என்றால் எல்பிடபிள்யூ ரிவ்யூ செய்ய வேண்டும்.
விக்கெட் இல்லை
கேட்ச் மூலம் விக்கெட் இல்லை என்றால் எல்பிடபிள்யூ ஆனதா என்றும் பேடில் பட்டது குறித்தும் ரிவ்யூ செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். ஸ்கிரீனை காட்டி எல்பிடபிள்யூ கேட்டுள்ளார். இதில் எல்பிடபிள்யூவிற்கு அதிக வாய்ப்பு இருந்தது . ஆனால் நடுவர்கள் இதை ஏற்காத காரணத்தால், அவர்களிடம் தோனி வாக்குவாதம் செய்தார் என்கிறார்கள்.