வெளிநாட்டில் ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020 ஐபிஎல் தொடர் முழுவதும் நடைபெற உள்ளது.
ஐபிஎல் திட்டம்
ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில், வீரர்கள், பயிற்சியாளர்கள் கடும் முன்னெச்சரிக்கையுடன் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட் 20 முதல் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ளன. ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை முக்கிய நகரங்களில் தங்க வைத்து வருகிறது.
ஆறு நாள் பயிற்சி முகாம்
அங்கே இருந்து தனி விமானங்களில் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளன. இந்தியாவில் இருக்கும் சிஎஸ்கே அணி வீரர்கள் வரும் ஆகஸ்ட் 22 அன்று ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ளனர். அதற்கு முன் சிஎஸ்கே அணி ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்த உள்ளது.
சிஎஸ்கே வீரர்கள் சென்னையில்
பெரும்பாலான சிஎஸ்கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 14 அன்று சென்னை வந்து சேர்ந்தனர். தோனி, சுரேஷ் ரெய்னா, பியுஷ் சாவ்லா, தீபக் சாஹர், மோனு குமார் ஆகியோர் ஒரே தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். அனைத்து வீரர்களும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே சென்னை வந்தனர்.
அந்த 3 வீரர்கள்
இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்குர் ஆகிய மூவரும் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியானது. அவர்கள் மூவரும் தனிப்பட்ட காரணங்களால் பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னை வரவில்லை என கூறப்பட்டது.
இதுதான் காரணமா?
இதற்கு என்ன காரணம்? சிலர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதே அவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்காததற்கு காரணம் என கூறி வருகின்றனர். சென்னையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எப்போது வருகிறார்கள்?
அதன் காரணமாக, சென்னையில் அதிக நாட்கள் தங்குவதை தவிர்க்க அவர்கள் பயிற்சி முகாமுக்கு வராமல் இருக்கலாம். அந்த மூன்று வீரர்களும் ஆகஸ்ட் 19 அன்று சென்னை வர உள்ளனர். அனைத்து வீரர்களுக்கும் கிளம்பும் முன் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் கட்டுப்பாடுகள்
தோனி உட்பட சென்னையில் தங்கும் மற்ற சிஎஸ்கே அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்கும் அவர்கள் ஜிம், நீச்சல் குளம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் இருந்து அணி பேருந்தில் மைதானம் செல்ல மட்டுமே அவர்களுக்கு அனுமதி கிடைக்கும்.