வரும் 29ம் தேதி துவக்கம்
கடந்த 2008 முதல் துவங்கி நடத்தப்பட்டுவரும் ஐபிஎல் சீசனின் 13வது தொடர் இந்த மாதம் 29ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த 70 வீரர்கள் உள்ளிட்ட 150 பேர் இந்த தொடருக்காக வெளிநாடுகளில் இருந்து வருவார்கள். திருவிழா போல நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஐபிஎல் 2020 ஜரூர்
சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சர்வதேச அளவில் பல போட்டிகள் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஐபிஎல் போட்டிகளும் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறல்லாமல் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கங்குலி திட்டவட்டம்
இதனிடையே, ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி துவங்கி நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் பாதிக்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வீரர்கள், அணிகள் விமானநிலையங்கள், வீரர்கள் தங்கும் ஹோட்டல்கள் போன்றவற்றிற்கு பிசிசிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்
இந்நிலையில் வீரர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் ரசிகர்களிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரசிகர்களின் புகைப்பட கேமராக்களை கொண்டு படம் எடுப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச அளவிலான விளையாட்டு நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.