கொரோனா வைரஸ் அச்சம்
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தீவிரமாக பரவத் துவங்கியது. அதனால், இந்தியாவில் லாக்டவுன் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கைகள் அமலில் உள்ளன. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு விசா அளிப்பதையும் தற்காலிகமாக தடை செய்துள்ளது இந்திய அரசு.
விசா சிக்கல்
அதனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு விசா பெற முடியாது என்ற சிக்கலில் இருந்தது பிசிசிஐ. அது மட்டுமில்லாமல், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வந்த நிலையில், வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பை கையாளுவது கடினமானதாக இருக்கும் என கருதியது பிசிசிஐ.
கால வரையின்றி தள்ளி வைப்பு
இந்த காரணங்களால் பிசிசிஐ ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15 வரை முதலில் தள்ளி வைத்தது. பின் லாக்டவுன் மே 3 வரை தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, ஐபிஎல் தொடரை அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையின்றி தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.
அடுத்து எப்போது நடக்கும்?
அடுத்து செப்டம்பர் - அக்டோபரில் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்த்துக் கொண்டுள்ளது பிசிசிஐ. அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தால் மட்டுமே இது சாத்தியம். அது மட்டுமின்றி, அக்டோபரில் டி20 உலகக்கோப்பை தொடரும் உள்ளது.
இலங்கை அழைப்பு
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கும் இலங்கை நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ-க்கு அழைப்பு வந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் போர்டு, பிசிசிஐ இக்கட்டான நிலையில் இருப்பதை புரிந்து கொண்டு சரியாக காய் நகர்த்தி உள்ளது.
கொரோனா அபாயம்
எப்படியும் கொரோனா வைரஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் முன்பு போல நடத்த முடியும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ரசிகர்கள் இல்லாத அரங்கில் போட்டிகளை நடத்துவது கூட அபாயமான ஒன்றாகவே உள்ளது.
இது சாத்தியம்
பாதிப்பு குறைவாக இருக்கும் நாடுகளில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது சாத்தியமான ஒன்று தான். அந்த யோசனையை தான் கூறி உள்ளது இலங்கை கிரிக்கெட் போர்டு. 2020 ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் அதனால் சுமார் 3,000 கோடி நஷ்டம் ஏற்படும்.
அதிக டிஆர்பி
அத்தனை பெரிய நஷ்டத்தை குறைக்க ஐபிஎல் தொடரை சிறிய அளவிலான தொடராக இலங்கையில் நடத்தலாம். ரசிகர்களும் தற்போது வீட்டுக்குள் முடங்கி இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை அதிக அளவில் பார்ப்பார்கள். அதன் மூலம், அதிக டிஆர்பி கிடைக்கும்.
இலங்கை திட்டம்
மறுபுறம், ஐபிஎல் போட்டிகள் இலங்கையில் நடந்தால் அதனால் இலங்கை ஓரளவு லாபம் அடையும். கூடுதல் பொருளாதார நன்மைகளையும் பெறும். பல்வேறு இரு தரப்பு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், அக்டோபரில் நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடர், ஆகஸ்டில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடர் என பல தொடர்கள் வரிசையில் உள்ளன.
கங்குலி கையில் முடிவு
ஒருவேளை இந்த கிரிக்கெட் போட்டிகள் நடந்தால், ஐபிஎல் தொடரை அந்த காலகட்டத்தில் நடத்த முடியாமல் போகும். அதனால், பிசிசிஐ அடுத்த ஒரீரு மாதங்களுக்குள் இலங்கையில் ஐபிஎல் தொடரை நடத்தும் முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி கையில் தான் இந்த முடிவு உள்ளது.