பஞ்சாப் - மும்பை போட்டி
2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின, இந்தப் போட்டியில் அதிரடி வீரர்கள் கொண்ட மும்பை அணியை சமாளிக்க திட்டமிட்டது பஞ்சாப் அணி. அதற்காக அணியில் மாற்றம் செய்தது.
கேஎல் ராகுல் திட்டம்
கீரான் பொல்லார்டு சிறந்த பார்மில் இருக்கும் நிலையில் அவரை சமாளிக்க ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதமை அணியில் தேர்வு செய்தார் கேஎல் ராகுல். லெக் ஸ்பின்னர் முருகன் அஸ்வின் நீக்கப்பட்டார். கௌதமை வைத்து பொல்லார்டு ரன் குவிப்பு தடுக்கும் எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்ற சந்தேகம் இருந்தது.
கடைசி ஐந்து ஓவர் திட்டம்
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் ரன் குவிக்க திட்டமிட்டது. 16வது ஓவரில் இருந்து ரன் வேட்டையை துவங்கியது அந்த அணி. 19 ஓவரில் மும்பை அணி 166 ரன்கள் குவித்தது. பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தனர்.
கடைசி ஓவர்
இந்த நிலையில், கடைசி ஓவரில் கிருஷ்ணப்பா கௌதமை பந்து வீச வைத்தார். அந்த ஓவரில் பொல்லார்டு - பாண்டியா இணைந்து 5 சிக்ஸ் அடித்தனர். அந்த ஒரு ஓவரில் மட்டும் 25 ரன்கள் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
கடும் விமர்சனம்
இதை அடுத்து கேஎல் ராகுல் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அவர் தவறான முடிவை எடுத்ததாகக் கூறி ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வந்தனர். அதிரடி வீரர்கள் இருக்கும் போது சுழற் பந்துவீச்சாளரை கடைசி ஓவர் வீச வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
யுவராஜ் சிங் ஆதரவு
இந்த நிலையில் யுவராஜ் சிங் கேஎல் ராகுலுக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளார். கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆஃப் ஸ்பின்னரை பயன்படுத்தியதை விமர்சிப்பது தவறு. நாம் எல்லோருமே தவறு செய்துள்ளோம். புதிய கேப்டனாக அவர் செய்துள்ள நல்ல விஷயங்களை தான் நாம் முதலில் பார்க்க வேண்டும் என்றார்.
இளம் கேப்டன்
கேஎல் ராகுல் முதன் முறையாக கேப்டனாக செயல்படுகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.