ஐபிஎல்
கொரோனா காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. எனினும் இப்போட்டிகளை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதானம்
அதே போல வீரர்களுக்கும் கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. டெல்லி மற்றும் அகமதாபாத்தில் தலா 8 போட்டிகளும் மீதமுள்ள மைதானங்களில் 10 போட்டிகளும் நடைபெறவுள்ளன. அதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொற்று உறுதி
இந்நிலையில் மும்பை வான்கேடே மைதானத்தில் பணிபுரியும் கள ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள 19 ஊழியர்களுக்கு கடந்த வாரம் செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேருக்கு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் மும்பையில் வரும் 10ம் தேதி முதல் போட்டி தொடங்குவதற்குள் அனைத்து பணிகளும் வேறு ஆட்களை வைத்து முடிக்கப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மாற்றப்படுமா மைதானம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகள் இரவு நேரத்தில் நடைபெறும் என்பதால் அதற்கான பணிகளை எப்படி பிசிசிஐ கையாள போகிறது என்பது கேள்விக்குறியாகவுள்ளது. அதே போல இதே போல தொடர்ந்து ஊழியர்களுக்கு தொற்று அதிகரிக்குமே ஆனால் போட்டிகளை வேறு மைதானத்திற்கு மாற்றவும் வாய்ப்பு உள்ளது.