சிஎஸ்கே மும்பை போட்டி
இந்த தொடரின் முதல் போட்டியாக தோனியின் தலைமையிலான சென்னை அணியையும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியையும் மோதவிட்டு பிசிசிஐ விருந்து வைத்துள்ளது. இந்த சீசனின் முதல் பாதியில் இரு அணிகளும் ஏற்கனவே மோதியுள்ளது. அதில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. எனவே 2வது போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வெற்றி வாய்ப்பு
இந்நிலையில் இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என முன்னால் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது நல்ல பலத்தில் உள்ளது. இது மட்டுமின்றி வழக்கமாக அவர்கள் தொடரின் 2ம் பாதியில் சிறப்பாக நல்ல உத்வேகத்துடன் விளையாடக்கூடியவர்கள். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் சிஎஸ்கே அணியை வீழ்த்தி இந்த முதல் போட்டியில் வெற்றி பெறும்.
சுழற்பந்துவீச்சாளர்கள்
இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் தற்போது 4வது இடத்தில் உள்ள மும்பை அணி, முதல் போட்டியிலேயே தங்களது வெற்றியை அவர்கள் நிச்சயம் பதிவு செய்ய நினைப்பார்கள். இருப்பினும் இந்த போட்டியில் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள். அந்த வகையில் மொயின் அலி மற்றும் ஜடேஜா ஆகியோர் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கேவின் தலைவலி
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தோனியின் ஆஸ்தான பேட்ஸ்மேனாக விளங்கும் ஃபாஃப் டூப்ளசிஸ் காயம் காரணமாக விளையாட மாட்டார் எனத்தெரிகிறது. இதனால் ஓப்பனிங்கே ஆப்பு உள்ளது. இதே போல லோயர் ஆர்டரில் கலக்கி வரும் சாம் கரணும் குவாரண்டைன் விதிமுறைகளால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி முழுபடையுடன் பலமாக உள்ளது. எனவே அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.