சிறப்பான தொடக்கம்
ஐதராபாத் அணியின் ஓப்பனர் சாஹா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர், மனிஷ் பாண்டே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த வார்னர் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் மனிஷ் பாண்டே நிலைத்து நின்று விளையாடி வந்ததால், ஹைதராபாத் அணி எப்படியும் வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாண்டே செய்த சிறிய தவறு ஆட்டத்தின் திசையையே மாற்றியது.
பாண்டேவின் தவறு
17.2 ஓவரில் ஷாபாஸ் அகமது வீசிய பந்தை எதிர்கொண்ட மனிஷ் பாண்டே, ஆஃப் திசையில் வந்த பந்தை தவறான முறையில் கட்டர் ஷாட் அடிக்க முற்பட்டு பெவிலியின் திரும்பினார். அதன்பிறகு, மற்றவர்களும் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 143/9 ரன்கள் மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
தோல்விக்கு காரணம்
சென்னை களத்தில் புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேன்கள் எடுத்தவுடனேயே அதிரடி காட்ட முடியாது. களத்தில் நன்கு செட்டில் ஆகி இருப்பவர்களால் மட்டுமே ரன் அடிக்க முடியும். அந்த வகையில் 38 ரன்கள அடித்து நன்கு செட்டிலாகி இருந்த பாண்டே, மோசமான ஷாட்டால் அணியின் தோல்விக்கு காரணமானார். இதனால் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.
அஜய் ஜடேஜா
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ஐதராபாத் அணி தற்போது வில்லியம்சன் குறித்து யோசித்து பார்ப்பார்கள். இதுபோன்ற கடின போட்டிகளில் அவரின் மதிப்பே வேறு. போட்டியை வென்று கொடுக்க ஒரு நிலையான வீரர் தேவை. அந்தவகையில் எனக்கு தெரிந்து மணிஷ் பாண்டே இனி ஐதராபாத் அணியின் ப்ளேயிங் 11ல் இடம் பெறமாட்டார். அதனை அனைவரும் பார்ப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.
சேவாக் அதிருப்தி
இதே போல் முன்னாள் வீரர் சேவாக், கடைசி வீரர்களாக களமிறங்குபவர்கள் தான் பதற்றத்தில் மிட் விக்கெட், லாங் ஆன் திசையில் பந்தை அடிக்க முயற்சிப்பார்கள். மனிஷ் பாண்டே நல்ல பார்மில்தான் இருந்தார். ஆனால் டெய்ல் என்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் மாதிரி மோசமான ஷாட்டை அடித்து ஆட்டமிழந்துள்ளார். இப்படித் தொடர்ந்து விளையாடினால் இந்திய அணியிலும் சரி, ஐதராபாத் அணியிலும் சர் தொடர்ந்து இடம்பிடிக்க முடியாது எனத் தெரிவித்தார்.