விமர்சனம்
மும்பை அணி நிர்ணயித்த 158 என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. நிதிஷ் ராணா 57 ரன்களும், சுப்மன் கில் 33 ரன்களும் எடுத்தனர். எனினும் அதன் பிறகு வந்தவர்கள் மோசமான முறையில் வெளியேறினர். 122 ரன்களுக்கு 3 விக்கெட் இருந்த நிலையில் 140 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து இலக்கை எட்ட முடியாமல் இருந்தது. குறிப்பாக ரஸ்ஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் கடைசி 3 ஓவர்களில் கூட அதிரடி காட்டாமல் மட்டை போட்டதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
வருத்தம்
இதனிடையே தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வருத்தம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவரது ட்வீட்டில் கொல்கத்தா அணியின் செயல்பாடு ஏமாற்றத்தை அளித்தது. ரசிகர்கள் அனைவருக்கு அணியின் சார்பாக மன்னிப்பு கோருகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
ரஸ்ஸல் விளக்கம்
இந்நிலையில் ஷாருக்கானின் பதிவுக்கு பதிலளித்துள்ள ரஸல், ஷாருக்கான் சொன்னதை நானும் ஒப்புக்கொள்கிறேன். எனினும் ஆட்டத்தின் முடிவு தெரியாமல் நம்மால் எதையும் முன்கூட்டியே உறுதிப்படுத்த முடியாது. நான் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளேன். முதலில் நன்கு ஆடிக்கொண்டிருக்கும் அணி திடீரென விக்கெட்களை இழந்து தோல்வியடையும்.
காரணம்
சென்னை பிட்ச்-ல் புதிதாக களமிறங்கும் வீரர்கள் சற்று திணற வேண்டியுள்ளது. நேற்றைய போட்டியிலும் அதேதான் நடந்தது. இந்த பிட்ச்சில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும் என்பது மிக கடினம். முதலில் அங்கு செட்டிலான பிறகு தான் ஆட முடியும். எனக்கும் சற்று கடினமாக இருந்தது. எனினும் நாங்கள் இன்னமும் நம்பிக்கையுடன் உள்ளோம். இது வெறும் 2வது போட்டிதான். மீண்டு நிச்சயம் வருவோம் என தெரிவித்துள்ளார்.