ஐபிஎல்
இந்திய வீரர்கள் ஏற்கனவே தங்களது அணியின் பயோ பபுளில் இணைந்துவிட்டனர். தற்போது அயல்நாட்டு வீரர்கள் அமீரகத்திற்கு புறப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் பங்கேற்றிருந்த இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக அமீரகம் செல்வதிலேயே முதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தயாராகும் இந்திய வீரர்கள்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் வரும் 15ம் தேதியன்று தான் முடிவடையவிருந்தது. ஆனால் இந்திய அணிக்குள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா உறுதியானதால், 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அனைத்து வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் முடிவுகளில் இந்திய வீரர்கள் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது. எனினும் போட்டியை ரத்து செய்துவிட்டு, வேறு ஒருநாளில் நடத்திக்கொள்ளலாம் என இரு தரப்பிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி ரத்து
இதனால் இந்த தொடர் 5 நாட்களுக்கு முன்னதாகவே முடிவை பெற்றுள்ளது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்கு புறப்படுவதற்காக தயாராகி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால், ஐபிஎல் அணிகளின் பபுளுக்குள் வருவதற்கு முன்னதாக ஒருவார காலம் குவாரண்டைனில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு அதில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்திய அணியின் பபுளில் இருந்து நேரடியாக ஐபிஎல் அணிகளின் பபுளுக்கு சென்றுவிடலாம் என அனுமதிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணிக்குள் கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால் பபுள் டூ பபுள் டிரான்ஃபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விதிமுறை
அதாவது அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் இங்கிலாந்தில் இருந்து அமீரகம் வரும் வீரர்களை நேரடியாக பபுளில் இணைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களை கட்டாயமாக 6 நாட்கள் தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் அணியின் பயோ பபுளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் அறைகளை புக் செய்துவிட்டு தயாராக உள்ள அனைத்து அணிகளும் வீரர்களின் வருகைக்காக காத்திருந்தனர். தற்போது பிசிசிஐ விடுத்துள்ள புதிய நிபந்தனை ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
தனி விமானம்
இதனையடுத்து இங்கிலாந்திலேயே இந்திய அணியின் பயோ பபுள் முடிவு வந்துவிட்டது. வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்தை விட்டு வெளியேற தயாராகி விட்டனர். அவர்களுக்காக ஐபிஎல் அணிகள் தனி விமானம் ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவிருக்கும் இங்கிலாந்து வீரர்களும் உடன் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.