ஐபிஎல்
கொரோனா காரணமாக கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் இந்தாண்டும் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரும் ஏப்.9ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. எனினும் இப்போட்டிகளை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதானம்
வீரர்கள் அதிக இடங்களுக்கு பயணம் செய்தால் கொரோனா பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இந்தாண்டு சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற திட்டமிட்டப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அகமதாபாத்தில் தலா 8 போட்டிகளும் மீதமுள்ள மைதானங்களில் 10 போட்டிகளும் நடைபெறவுள்ளன. அதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மஹாராஷ்டிரா
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால் அங்கு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு அங்கு 40,000 பேருக்கு கொரோனா உறுதியாகிறது. இதனால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, இன்னும் 2 நாட்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்றால் முழு ஊரடங்கு போடவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேறு மைதானம்
இந்நிலையில் லாக்டவுன் போடப்பட்டாலும் ஐபிஎல் போட்டிக்கும், வீரர்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதே போல அணிகளும் வேறு மைதானம் மாற்றுவது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனத்தெரிவித்துள்ளன. எனினும் தற்போது மும்பைக்கு மாற்றாக ஐதரபாத்தை மாற்று மைதானமாக பயன்படுத்த பிசிசிஐ தனது தேர்வில் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்தால் மும்பையில் நடைபெறவேண்டிய போட்டிகள் ஐதராபாத்திற்கு மாற்றப்படும் என தெரிகிறது.