ஐபிஎல் தொடர்
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று
கொரோனா அச்சம் காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
வெளியேறிய வீரர்கள்
தனது குடும்பத்தினர் கொரோனா அச்சுறுத்தலால் பதற்றத்தில் இருப்பதாகவும், எனவே அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். அதேபோல ராஜஸ்தான் அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் இருந்து நேற்று வெளியேறினர்.
முக்கிய காரணம்
ஐபிஎல் தொடரில் இருந்து அயல்நாட்டு வீரர்கள் வெளியேறுவதற்கு சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்து வருவதே காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே பயோ பபுள் சூழல் காரணமாக நீண்ட நாட்களாக குடும்பத்தினரை பார்க்க முடியாமல் உள்ளனர். எனவே விமானங்களுக்கு தடை விதித்தால் நீண்ட நாட்கள் பார்க்கமுடியாமல் போகும் என்ற அச்சத்தில் அவர்கள் வெளியேறுவதாக கூறப்படுகிறது.
நிறுத்தப்படுமா ஐபிஎல்
இந்நிலையில் வீரர்கள் தொடர்ந்து வெளியேறுவதால் ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி உலா வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஐபிஎல் தொடர் வழக்கும் போல் தொடர்ந்து நடக்கும். எந்தவித இடையூறும் இன்றி பாதுகாப்புடன் தொடர்ந்து நடைபெறும். கொரோனா அச்சம் காரணமாக வெளியேற விரும்பும் வீரர்கள் தாரளமாக வெளியேறட்டும். அவர்களை யாரும் தடுக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு மாதம்
ஐபிஎல் தொடரில் இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஏப்.9ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் ஒரு மாதத்திற்குள் பல வீரர்கள் வெளியேற தொடங்கிவிட்டனர். இன்னும் இந்த தொடர் மே 30ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளதால் அடுத்து வீரர்கள் வெளியேறுவார்களா அல்லது தொடர்ந்து விளையாடுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.