நிதியுதவி
இந்தியாவின் கொரோனா பாதிப்பை பார்த்த கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அதற்காக நிதியுதவி செய்தனர். ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மிங்ஸ் கொரோனா நிவாரணமாக ரூ.37 லட்சம் கொடுத்து தொடங்கிவைத்தார். அதன் பின்னர் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் கிங்ஸ், ஷிகர் தவான், நிகோலஸ் பூரண், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக நிதியுதவி செய்தனர்,
கொடுத்தே ஆக வேண்டும்
இந்நிலையில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கவுன்சில் கொரோனா நிவாரணமாக ரூ.100 கோடியாவது கொடுத்தே ஆக வேண்டும் என முன்னாள் வீரர் சுரிந்தர் கண்ணா தெரிவித்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டதால் பிசிசிஐ-யே சுமார் ரூ.2200 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நஷ்டம் இல்லை
இதனை குறிப்பிட்டு பேசிய சுரிந்தர் கண்ணா, ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதால் பிசிசிஐ-ன் லாபம் தான் குறைந்துள்ளது. நஷ்டம் ஏற்படவில்லை. ஒரு வேளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் Force Majeure Clause இன்சூரன்ஸ் ( பேரழிவுகளின் போது தொடர்கள் பாதிக்கப்பட்டால் பிசிசிஐ பணத்தை திருப்பி தர தேவையில்லை) போடப்பட்டிருந்தால் லாபமும் குறையப்போவதில்லை.
சுரிந்தர் கோரிக்கை
இந்த காரணத்தால் கவுன்சிலிடம் போதிய பணம் இருக்கும். எனவே நாட்டில் நிலவும் பேரழிவை கருத்திற்கொண்டு, சமூக அக்கறையுடன் பிசிசிஐ நிதியுதவி செய்தே ஆக வேண்டும் என சுரிந்தர் கண்ணா தெரிவித்துள்ளார். சரிந்தர் கண்ணாவும் ஐபிஎல் கவுன்சிலும் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்வி
தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் தொடர் முன்கூட்டியே நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அணி உரிமையாளர்களும் இதுகுறித்து எந்த அக்கரையும் காட்டவில்லை. அவர்களுக்கு லாபம் கம்மியாகிறது என்றுதான் வருத்தப்பட்டார்களா?, மனிதர்களின் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதை உணரவில்லையா? என சரமாரியாக கேள்விக்கேட்டுள்ளார்.