ஐபிஎல் போட்டிகள்
கடந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாத நிலைக்கு சென்ற சிஎஸ்கே அணி, இந்தாண்டு அதிரடி கம்பேக் கொடுத்துள்ளது. முதல் பாதி தொடரில் இரண்டே இரண்டு தோல்வியை மட்டுமே பெற்றிருந்த அந்த அணி, 2வது பாதி தொடரின் முதல் ஆட்டத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடக்கத்தில் பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி கடைசி சில ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டது. இதே போல பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தனதாக்கியது.
புதிய சிக்கல்
இந்த சீசனின் லீக் தொடரில் சென்னை அணி முழு பலத்துடன் சிறப்பாக செயல்பட்டாலும், ப்ளே ஆஃப் சுற்றுகளில் பெரும் பின்னடைவு ஏற்படவிருந்தது. அக்டோபர் 17ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. அதற்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எனவே ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆஃப் சுற்றுகளின் போது இங்கிலாந்து வீரர்கள் வெளியேறிவிடுவார்கள். குறிப்பாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களாக இருக்கும் மொயின் அலி மற்றும் சாம் கரண் ஆகியோர் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிக்கல் நீங்கியது
இந்நிலையில் சிஎஸ்கேவுக்கு இருந்த சிக்கல் தற்போது நீங்கியுள்ளது. பாகிஸ்தானில் தற்போது வீரர்களுக்கு பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளது என்பதாகவும், அங்கு செல்வது ஆபத்தானது என கூறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது. எனவே ப்ளே ஆஃப் சுற்றின் போது மொயின் அலி, சாம் கரண், மோர்கன் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
புள்ளிவிவரம்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இதனால் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.