சென்னை அணியில் கொரோனா
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில் இந்தாண்டு இந்தியாவில் மொத்தம் 6 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணி விரர்களும் ஹோட்டல் அறையில் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி அணிகளுக்குள் கொரோனா நுழைந்துள்ளது. குறிப்பாக மும்பையில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
வான்கடே மைதானம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஐபிஎல்-க்கும் அது இடையூரை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வான்கேடே மைதானத்தில் பணிபுரியும் கள ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல ஐபிஎல் போட்டிகளை மேற்பார்வையிடம் அதிகாரிகள் 8 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
அடுத்தடுத்த வீரர்கள்
ஊழியர்கள் மட்டுமின்றி அணி வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் முகாமிட்டுள்ள சென்னை அணியை சேர்ந்த ஒரு ஊழியருக்கும், டெல்லி அணியை சேர்ந்த அக்ஷர் பட்டேலுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் இருந்து வேறு நகரத்திற்கு போட்டிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அணிகளிடம் இருந்தும் கிரிக்கெட் வல்லுநர்களிடம் இருந்தும் வலுத்து வருகிறது.
போர்க்கொடி
இந்நிலையில் அணிகளை தவிர்த்து போட்டிகளை ஒளிப்பரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் மும்பையில் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ-ல் இருந்து வெளியான தகவலில், களத்தில் ஊழியர்களுக்கு கொரோனா ஏற்படுமானால், ஒளிப்பரப்பு பணியில் பல ஊழியர்கள் மைதானத்தில் இருக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் கொரோனா உறுதியாக வாய்ப்புள்ளது. எனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பையில் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடி நடக்கும்
கொரோனா பாதிப்புகள் குறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரிகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் லாக்டவுன் போடப்பட்டுள்ளாலும், வீரர்கள் பயோ பபுளில் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் போட்டியில் ரசிகர்கள் யாரும் இன்றி நடத்தப்படுவதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. திட்டமிட்டபடி மும்பையில் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐ சார்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஒரு வேளை போட்டிகள் மாற்றப்படும் முடிவுக்கு பிசிசிஐ வந்தால், அடுத்த தேர்வாக ஐதராபாத் மற்றும் இண்டூர் மைதானங்கள் உள்ளன.