முதல் போட்டி
14வது ஐபிஎல் தொடர் மிகுந்த பாதுகாப்புடன் இன்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. முதலில் அதிரடியாக ஆடிய மும்பை அணி இறுதியில் ஆர்சிபி அணி ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் சுருண்டது.
ஏமாற்றம்
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி ஓப்பனராக களமிறங்கி எதிர்பார்த்தது அளவில் செயல்படவில்லை. 29 பந்துகளை சந்தித்த அவர் 33 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் அடங்கும். நிதானமாக ஆடிவந்த அவரை எதிர்பார்த்தது போலவே பும்ரா எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டாக்கினார்.
எதிர்பார்ப்பு
இங்கிலாந்து டி20 தொடரில் ஓப்பனிங் வீரராக சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி ஐபிஎல்-ம் தொடக்க வீராக ஆடுவேன் அறிவித்தது பல அணிகளுக்கும் தலைவலியை கொடுத்தது. ஏனென்றால் கோலி கடந்த 2016ம் ஆண்டு ஓப்பனராக களமிறங்கி 973 ரன்களை குவித்தார். இதில் 4 சதங்களும் அடங்கும். இந்த ஸ்கோர் தான் ஒரு சீசனில் அதிகமாக எடுக்கப்பட்ட தனி நபர் ரன் ஆகும். ஆனால் இந்த முறை பும்ராவால் 33 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.
கணித்த முன்னாள் வீரர்
ஆட்டத்தின் முன்னர் கோலி - பும்ரா போட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா கணித்திருந்தார். அதில், விராட் கோலி பேட்டிங்கிற்கு களமிறங்கும் போதெல்லாம், ரோகித் சர்மா பும்ராவை தான் ஓவர் வீச அழைப்பார். பும்ராவின் பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயற்சி செய்து விராட் கோலி 2 -3 முறை அவுட்டாகியுள்ளார். வழக்கமாக விராட் கோலி இதுபோன்று அவுட்டாக மாட்டார். ஆனால் பும்ராவிடம் மட்டும் அடித்து ஆட முயற்சித்து தவறான ஷாட்களால் அவுட்டாகி வெளியேறுவார் என தெரிவித்தார்.