உற்சாக கொண்டாட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை தொடர்ந்து இந்தியா திரும்பிய அந்த அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றிருக்கும் தோனி, இந்தியா திரும்பியவுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விழா நடத்தப்படும் என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை மதிப்பு
சென்னை அணியின் வெற்றி ஒருபுறம் பேசுப்பொருளாக உள்ள நிலையில் அந்த அணி பொருளாதார ரீதியாகவும் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் சென்னை அணியின் பங்குச்சந்தை மதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி சிஎஸ்கே அணியின் ஒரு பங்கு ரூ.135க்கு விற்பனை ஆகிறது. அதாவது தற்போது அந்த அணியின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.4,200 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இவ்வளவு பெரிய மதிப்பு கொண்ட அணியாக சிஎஸ்கே மட்டுமே வலம் வருகிறது.
டபுள் ஆனது
கடந்த 2019ம் ஆண்டு கொரோனாவால் ஐபிஎல் பாதிக்கப்பட்டது முதல் 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோற்றதுவரை சிஎஸ்கே அணியின் மதிப்பு ரூ.611 கோடியாக இருந்தது. ஒரு பங்கானது ரூ.12 முதல் அதிகபட்சமாக 50 வரை மட்டுமே விற்பனையானது. அதன் பிறகு 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் வெற்றிகளை குவித்தவுடன் சற்று உயர்ந்தது. அதாவது ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட மே மாதத்தின் போது சிஎஸ்கேவின் பங்கு ரூ.60 - 62க்கு விற்பனையானது. ஒட்டுமொத்த மதிப்பு ரூ.2,465 கோடியாக இருந்தது.
இந்தியா சிமெண்ட்ஸ்
இந்நிலையில் தற்போது சிஎஸ்கேவின் ஒரு பங்கு ரூ.135 க்கு விற்பனையாகிறது. அந்த அணியின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.4,200 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னை அணியின் தாயகமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பிற்கே தற்போது சிஎஸ்கே போட்டி கொடுக்கிறது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இன்றைய பங்குசந்தை மதிப்பு ரூ. 6,600 கோடியாகும். ஒரு பங்கு ரூ.212க்கு விற்பனையாகிறது. எனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை 75% நெருங்கிவிட்டது சென்னை அணி. வரும் காலங்களில் அதனை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.