தொடர்ந்து நம்பிக்கை
சென்னை அணிக்காக கடந்தாண்டு அறிமுகமான ருத்ராஜ் கெயிக்வாட் கடந்த சீசனில் முதலில் சில ஆட்டங்களில் சொதப்பிய போதும் பின்னர் அடுத்தடுத்த அதிரடியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் இந்தாண்டும் அவருக்கு ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓப்பனிங்கிற்கு அனுபவ வீரர் உத்தப்பா இருந்த போதும் ருத்ராஜ் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்து வருகிறது.
மீண்டும் சொதப்பல்
ஆனால் இந்தாண்டு சிஎஸ்கே நினைத்தது போன்று அவர் பெரியளவில் ஆடவில்லை. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளிலும் ருத்ராஜ் கெயிக்வாட் பின்வருமாறு 5, 5, 10 என்ற ரன்களே அடித்துள்ளார். இவரின் சொதப்பலால் சிஎஸ்கே ஆரம்பத்திலேயே தடுமாறுவதாகவும், இவரை அணியில் இருந்து நீக்கி விட்டு ஐபிஎல்-ல் மிகவும் அனுபவம் வாய்ந்த ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோபத்துடன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதிரடி முடிவு
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங், ராபின் உத்தப்பா விளையாட காத்திருக்கிறார்தான். ஆனால் ருத்ராஜ் கெயிக்வாட்டிற்கு, அவர் கடந்தாண்டு சிறப்பாக ஆடியதற்காக இந்த சீசனில் சிறிது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரரும், அவர் முயற்சிப்பதை செய்ய நாங்கள் தேவையான அளவில் வாய்ப்புகளை கொடுப்போம். அதுவே சிஎஸ்கே அணி எப்போதும் பின்பற்றுவதாகும்.
அப்செட்
தற்போதைய சூழலில் ருத்ராஜ் கெயிக்வாட் நீக்கப்பட மாட்டார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும். அவரின் ஆட்டத்தை பார்க்கலாம், பின்னர் அது குறித்து முடிவெடுக்கப்படும் என ஃப்ளெம்மிங் தெரிவித்தார். சென்னை அணி இளம் வீரருக்கு தொடர்ந்து இப்படி வாய்ப்பு கொடுப்பதால் சீனியர் வீரர் உத்தப்பா அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.