அதிர்ச்சி தொடக்கம்
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொண்டிருந்த நிலையில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 11 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.
வீரர்கள் தடுமாற்றம்
மறுபுறம் ஆடிக்கொண்டிருந்த நிதிஷ் ராணா 22 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற இதன் பின்னர் களமிறங்கிய சுனில் நரேனும் 6 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதனால் 54 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.
கேப்டனும் சொதப்பல்
பொறுப்புடன் அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் இயான் மோர்கன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். ராகுல் திரிபாதி அடித்த பந்தில் சிங்கிள் எடுக்க மோர்கன் முயற்சி செய்தார். ஆனால் சாதூர்யமாக செயல்பட்ட ராஜஸ்தான் வீரர் கிறிஸ் மோரிஸ் சிறப்பான த்ரோவால் ரன் அவுட்டாக்கினார்.
எளிய இலக்கு
கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி அசத்திய தினேஷ் கார்த்திக் (25), ஆண்ட்ரே ரஸல் (9), பேட் கம்மின்ஸ் (10) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
தொடக்கம் சரிவு
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 40 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து அந்த அணி தடுமாறியது.
பொறுப்பான ஆட்டம்
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ஷிவம் தூபே நிதானமாக ரன் சேர்த்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் சீராக ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ஷிவம் தூபே 22 ரன்களுக்கு வெளியேறினார். அவருக்கு பின்னர் வந்த ராகுல் தேவட்டியா 5 ரன்களுக்கு அவுட்டானார். இதனையடுத்து டேவிட் மில்லருடன் சஞ்சு சாம்சன் நிதானமாக ரன் சேர்க்க 18.5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 42 ரன்களும், மில்லர் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.