3 நகரங்கள்
மொத்தம் உள்ள 31 போட்டிகள் அனைத்தும் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.
சிஎஸ்கே
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என அனைத்து அணிகளும் இப்போது அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
குவாரண்டைன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், கரண் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், கே.எம்.ஆசிப் உள்ளிட்ட வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே துபாய்க்கு சென்று, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த ஜடேஜா, புஜாரா, ஷர்துல் தாகூர் ஆகிய சென்னை வீரர்களும் அமீரகம் சென்று குவாரண்டைனில் இருக்கின்றனர்.
கேள்விக்குறி
இந்நிலையில், சில முக்கிய வீரர்கள் தொடரின் முதல் வாரத்தில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்களும், இலங்கை வீரர்களும் ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் கலந்து கொள்வது சந்தேகம் என தெரிகிறது. தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (MI), தப்ரைஸ் ஷம்சி (RR), வணிந்து ஹஸரங்கா (RCB), டேவிட் மில்லர் (RR) துஷ்மந்தா சமீரா (RCB), எய்டன் மார்க்ரம் (PBKS) ஆகிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
குயின்டன் டி காக்
ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகம் இலங்கை நாட்டை இன்னும் தங்களது ரெட் லிஸ்ட்டில் தான் வைத்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, இலங்கையில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தவுடன் 6 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். இந்நிலையில் இந்த வீரர்கள் அனைவரும் நாளை அமீரகத்தை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மிக முக்கியமானவர் குயின்டன் டி காக். ஏனெனில், மும்பை அணி தனது முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.
பபுள் டூ பபுள்
இவர்கள் அனைவரும் நாளை அமீரகத்தை அடைந்து, 6 நாட்கள் குவாரன்டைனில் இருந்தால், வரும் 21ம் தேதி வரை எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது. அதுவே, கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இருந்து வரும் வீரர்கள் நேரடியாக ஐபிஎல் பயோ-பபுளில் இணைந்து கொள்ளலாம். அவர்கள் 6 நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இலங்கை ரெட்-லிஸ்டில் இருப்பதால் நேரடியாக இலங்கை பயோ-பபுளில் இருந்து ஐபிஎல் பயோ-பபுளில் வீரர்கள் இணைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.