எப்படி
கடந்த வருடம் இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்கள் 70 ஆயிரம் இருந்த போதே ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கவில்லை. அப்போதே ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில்தான் நடந்தது. வீரர்களின் பாதுகாப்பு கருதி மொத்த ஐபிஎல் சீசனும் அமீரகத்தில்தான் நடந்தது.
ஆனால்
ஆனால் இந்த முறை இந்தியாவில் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. பல மாநிலங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. முக்கியமாக மும்பை, சென்னையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது . ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் நடக்க உள்ளது.
மோசமான நிலை
இந்தியாவில் கொரோனா மிக மோசமாக பரவி வரும் நிலையில் ஐபிஎல் நடத்தப்படுவது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. வீரர்களின் பாதுகாப்பு என்ன ஆகும். இப்படி ரிஸ்க் எடுப்பது ஏன்? கேஸ்கள் குறைவாக வந்த போது கடந்த வருடமே இந்தியாவில் ஐபிஎல் நடக்கவில்லை, அப்படி இருக்கும் போது இந்த வருடம் மட்டும் ரிஸ்க் எடுப்பது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கேள்வி
அதிலும் இந்த வருடம் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு கொரோனா வந்துள்ளது. டேனியல் சாம்ஸ், அக்சர் பட்டேல் வரை பலருக்கு கொரோனா வந்துள்ளது. இதனால் பல அணிகள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் போய் உள்ளது . இப்படி இருக்கும் போது கஷ்டப்பட்டு, ரிஸ்க் எடுத்து போட்டிகளை நடத்துவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது .
வீரர்கள்
வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா வருவதால் ஐபிஎல் அணிகளும் கொஞ்சம் பதற்றத்தில்தான் இருக்கிறதாம். இன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கொரோனா குறித்து பேச உள்ளார். இதனால் ஐபிஎல் போட்டிக்கு சிக்கல் வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி நடப்பதே தற்போது கொஞ்சம் சந்தேகம் ஆகியுள்ளது.
சந்தேகம்
ஐபிஎல் போட்டிகள் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி என்ன முடிவு எடுக்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. இவர் எடுக்கும் முடிவை பொறுத்தே ஐபிஎல் தொடரின் தலைவிதி மாறும் என்கிறார்கள். கங்குலி இன்றே ஐபிஎல் தொடர் குறித்தும், கட்டுப்பாட்டு விதிகள் குறித்தும் முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.