தோனி மீது விமர்சனம்
எம்.எஸ்.தோனி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில், தோனியின் ஃபார்ம் மற்றும் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி முதல் முறையாக ப்ளே ஆஃப்-க்கு செல்லாமல் வெளியேறியது. பொறுப்புடன் ஆட வேண்டிய கேப்டன் தோனியே பெரிதாக சோபிக்கவில்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். 14 போட்டிகளில் ஆடிய அவர் 200 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என குரல் எழுந்தன.
பரவிய தகவல்
இதனையடுத்து அந்த ஓய்வு அறிவிப்பு குறித்த குரல்கள் இந்தாண்டும் ஒலித்து வருகிறது. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியாக டெல்லி அணியை வரும் 10ம் தேதி எதிர்கொள்கிறது. இதற்காக தோனி தன்னை பெரிய அளவில் அவர் தயார்படுத்தி இருந்தாலும் அவரின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.
எப்போது ஓய்வு?
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் காசி விஸ்வநாதன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது தோனியின் கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. அவருக்கான மாற்றாக நாங்கள் எந்த வீரரையும் தற்போது வரை பார்க்கவில்லை எனக்கூறியுள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னா
மற்றொரு அனுபவ வீரரான ரெய்னா குறித்து பேசிய அவர், சுரேஷ் ரெய்னா கடந்த 10 -12 வருடங்களாக அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தவர். விஜய் ஹசாரே கோப்பையில் அவர் ஆடவில்லை என்றாலும் சையது முஷ்டக் அலி கோப்பையில் விளையாடியுள்ளார். அணியுடன் கடந்த 10 நாட்களாக பயிற்சி செய்துள்ளார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட ரெய்னா எதிர்நோக்கி உள்ளார் என தெரிவித்தார்.