சிஎஸ்கே ஏலம்
இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் கழட்டிவிடப்பட்ட இவரை ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி. இந்நிலையில் பேட்டிங் பவுலிங் என சிஎஸ்கேவுக்கு சிறப்பான பங்களிப்பை அவர் கொடுத்து வருகிறார்.
அசத்தல்
சென்னை அணியில் 3வது வீரராக களமிறங்கும் மொயின் அலி இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் 36, 46, 26 என ரன்களை அடித்துள்ளார். இதில் சிறப்பு என்னென்றால் மொயின் அலி களமிறங்கியது முதலே அதிரடி காட்டி குறைந்த பந்துகளில் ரன்களை எடுத்துக்கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். இதனால் அணிக்கு நல்ல அடித்தளம் அமைகிறது. இதே போல பவுலிங்கிலும் 3 போட்டிகளில் 4 விக்கெட்களை எடுத்துள்ளார்.
ப்ளெம்மிங் பாராட்டு
இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங், சிஎஸ்கேவில் கடந்த வருடம் ஆல்ரவுண்டர்கள் செயல்பாட்டில் சிறிது பிரச்னை இருந்தது. ஆனால் இந்த வருடம் மொயின் அலி நாங்கள் எதிர்பார்த்ததை கொடுத்து அதை சரிசெய்துவிட்டார். 3வது வீரராக களமிறங்கும் அவர் தனது வியப்பளிக்கும் ஆட்டத்தால் அணி அதிக ஸ்கோர் அடிக்க உதவுகிறார். சென்னை அணி 20 ஓவர்களிலும் சிறப்பான பேட்டிங் செய்யவில்லை. எனினும் அதிகப்படியான சிறந்த வீரர்கள் இருப்பதால் இறுதியில் நல்ல ஸ்கோரை எட்டிவிட்டோம் என தெரிவித்தார்.
இம்ரான் தாஹீருக்கு சிக்கல்
மொயின் அலிக்கு பாராட்டு கிடைத்திருப்பதால் அவர் இனி அனைத்து போட்டிகளிலும் இடம் பெறுவார். இதனால் அணியின் சீனியர் வீரர் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு பறிபோகிறது. இம்ரான் தாஹீருக்கு கடந்தாண்டே பெரும்பாலான போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மொயின் அலி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்துவதால் தாஹீரின் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.