வாய்ப்பு
கடந்த சீசனில் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என அணி தேர்வில் தோனி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளார். அந்த வகையில் ஓப்பனிங்கிற்கு அனுபவ வீரர்கள் டூப்ளசிஸ் - உத்தப்பா களமிறங்கினால் நன்றாக இருக்கும் என பல முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். ஆனால் தோனி கடந்தாண்டை போல இளம் வீரர் ருத்ராஜ் கெயிக்வாட்டிற்கு ஓப்பனிங்கில் நம்பி வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
பொய்யான நம்பிக்கை
முதல் போட்டியில் தோனியியே நம்பி அனுப்பியுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கெயிக் வாட் பெரும் அதிர்ச்சி கொடுத்தார். 8 பந்துகளை சந்தித்த ருத்ராஜ் கெயிக்வாட் 5 ரன்கள் மட்டுமே அடித்து மோசமாக அவுட்டானார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்டது. எனினும் தோனி மீண்டும் நம்பி வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இந்த முறையும் கெயிக் வாட் 5 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவர் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் திணறி கேட்ச் கொடுத்து வெளியேறியது சென்னை அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தோனியின் நம்பிக்கையை மீண்டும் பொய்யாக்கியுள்ளார்.
சிறப்பான ஆட்டம்
கடந்த ஆண்டு சி.எஸ்.கே மோசமாக ஆடினாலும், ருத்ராஜ் கெயிக் வாட் மட்டும்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முதல் 3 போட்டிகளிலும் அவர் சொதப்பிய போதும் தோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அடுத்த 3 போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 65*, 70, 62* ரன்களை எடுத்து அசத்தினார். மொத்தம் 6 போட்டிகளில் ஆடிய அவர் 204 ரன்களை எடுத்தார்.
நம்புவாரா தோனி
எனவே இந்த ஆண்டும் ருத்ராக் கெயிக்வாட் முதல் சில போட்டிகளில் சொதப்பினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தன்னை தயார்படுத்திக்கொண்டு சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோனி கடந்தாண்டை போலவே மீண்டும் மீண்டும் ருத்ராஜுக்கு வாய்ப்பு தருவாரா என்ற கேள்வியும் ஒரு புறம் உள்ளது.