ஐபிஎல் தொடர்
சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது.
முன்னேற்பாடுகள்
ஐபிஎல்-க்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் அணிகள் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல முன்கூட்டியே அமீரகம் சென்றுவிட்டது. தோனி, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ருத்ராஜ் கெயிக்வாட் உள்ளிட்ட வீரர்கள் குடும்பத்தினருடன் அமீரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
துபாயில் சிஎஸ்கே
தனி விமானம் மூலம் நேராக துபாய் சென்றடைந்த சிஎஸ்கே அணியினர் தனியார் ஓட்டல் ஒன்றில் முதலில் 6 நாட்களுக்கு குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 நாட்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் நெகடிவ் என முடிவு வந்த பின்னர் புதிய பபுளில் இணைக்கப்படுவார்கள். இந்நிலையில் குவாரண்டைனில் இருக்கும் வீரர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து சிஎஸ்கே அணி வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி சுரேஷ் ரெய்னா குறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் முக்கிய விஷயம் தெரியவந்துள்ளது.
என்ன பிரச்னை
கடந்தாண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்ற போது சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் துபாய் சென்று அங்கு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது சுரேஷ் ரெய்னா ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திடீரென தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். இதற்கு முதலில், ரெய்னா பால்கனியுடன் கூடிய அறை கேட்டதாகவும், அது கிடைக்காததால் அணி நிர்வாகத்துடன் பிரச்னை ஏற்பட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டது. பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதாக கூறப்பட்டது.
வைரல் விடியோ
இந்த சூழலில் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக ரெய்னாவுக்கு பால்கனியுடன் கூடிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சுரேஷ் ரெய்னா பால்கனியில் நின்றுக் கொண்டு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடலுக்கு அருகே சூரிய உதயம் தெரியும் போது அவர் அங்கிருந்து பொழுதை கழித்து வருகிறார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக உணவுகளையும் ரெய்னா சமைத்து வருகிறார். அதனை அவர்கள் பால்கனி அருகே தான் அமர்ந்து உண்பார்கள் என தெரிகிறது. எனவே இதற்காக தான் ரெய்னா பால்கனியோடு உள்ள அறை வேண்டும் என அடம்பிடித்ததாக தெரிகிறது.