விமர்சனம்
எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாக அமையவில்லை. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி, கடந்த சீசனில் வெறும் 12 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடம் பிடித்தது. இதனால் இந்தாண்டு ஐபிஎல்-காக வீரர்களை முன்கூட்டியே அழைத்து தீவிர பயிற்சி முகாமை நடத்தி வருகிறது அணி நிர்வாகம்.
இளம் வீரர்
இதற்காக இந்தாண்டு ஏலம் முதலே பக்கா ஸ்கெட்ச் போட்டு களமிறங்கியுள்ளது. குறிப்பாக ரூ.20 லட்சத்திற்கு அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட கிருஷ்ணப்பா கௌதமை, ரூ.9.25 கோடிக்கு வாங்கியது சி.எஸ்.கே. ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் ஒருமுறை கூட ஆடாத வீரர் இவ்வளவு அதிகத்தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை. அவரை வைத்து நிறைய ப்ளான்களை தோனி போட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தோனிக்கு பாராட்டு
இதுகுறித்து பேசிய கிருஷ்ணப்பா கௌதம், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சி.எஸ்.கே அணியில் நான் ஒரு பிரஷரையும் ( அழுத்தம்) எதிர்கொள்ளவில்லை. பவுலர்கள் கேப்டன் தோனிக்கு கீழ் செயல்படுவதை மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால் அவர் ஒவ்வொரு பவுலர்களின் பலத்தை புரிந்துக்கொண்டு, அவர்களிடம் இருந்து சிறப்பான பங்களிப்பை பெற்றுக்கொள்வார் என தெரிவித்தார்.
புகழாரம்
சி.எஸ்.கே அணி நிர்வாகம் கிரிக்கெட்டில் நீண்ட காலம் இருந்திருப்பதால், வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை நன்கு தெரிந்துள்ளது. எதேனும் தவறுகள் நடந்துவிட்டால் கூட, அணி நிர்வாகத்திடம் இருந்து வரும் நம்பிக்கை வார்த்தைகள் ஆறுதல் தரும். வீரர் எதையேனும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் சரியான முறையில் கூறுவார்கள். இதுபோன்று சிறப்பாக கையாள்வது, வீரர்கள் களத்திற்கு சென்று சிறப்பாக செயல்பட முடிகிறது. இதுவே சென்னை அணியின் சிறப்பம்சம் என கௌதம் தெரிவித்தார்.