ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவார காலமே இருப்பதால், அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்றுவிட்டன. அயல்நாட்டு வீரர்களும் அணி பபுளுடன் இணைந்து வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் ஏகபோகத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
உச்சக்கட்ட எதிர்பார்ப்பு
இந்த தொடரின் முதல் பகுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியிருந்தது. எனவே அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் சிஎஸ்கேவும், முதல் போட்டியையே வெற்றியுடன் தொடங்க வேண்டும் என மும்பை அணியும் முணைப்பு காட்டி வருகின்றன.
பெரும் பின்னடைவு
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இந்த தொடைரில் மிகப்பெரும் பின்னடைவுகள் ஏற்படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் டுவைன் பிராவோ மற்றும் ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகியோர் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் போது அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.
சுட்டிக் குழந்தை
இது ஒருபுறம் இருக்க, தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சாம் கரண் இன்னும் அமீரகத்திற்கு செல்லவில்லை எனத்தெரிகிறது. தனிப்பட்ட காரணங்களால் அவரின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமீரக விதிப்படி, அயல்நாட்டி இருந்து வருபவர்கள் கட்டாயம் 6 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே இதற்கு மேல் சாம் கரண் வந்தாலும் கொரோனா விதிமுறைகளால் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க முடியாது.
நல்ல ஃபார்ம்
நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பர் கம்பேக் கொடுத்திருந்தது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் 2வது பகுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.