பார்சல்
அன்வர் என்ற நபர், சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தைகாக பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை எடுத்துச்சென்றுள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதில் சிரமம் நிலவுவதால் அவர் அதனை எடுத்துச்சென்றுள்ளார். ஆக்சிஜன் கான்சண்டிரேட்டர் என்பது பேட்டரியில் இயக்கும் ஒரு சாதனமாகும். இது சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றை சுத்திகரித்து நோயாளிக்கு ஆக்சிஜனைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
மாயமான பார்சல்
கடந்த 26ம் தேதி டெல்லி சென்றடைந்த அன்வர் அங்கு விமான நிலையத்தில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் அடங்கிய பார்சலை சோதனைக்காக சோதனை பெல்டில் அனுப்பி விட்டு பார்சலை எடுக்க காத்திருந்துள்ளார். ஆனால் அங்கு அவரின் பார்சல் வரவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்தும் அவரிடம் அந்த கருவி வந்து சேரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் பார்சல் தவறுதலாக சரக்குகளை கொண்டு செல்லும் பகுதிக்கு சென்றிருக்கும் எனவும் சோதனை செய்வதாகவும் கூறியுள்ளனர்.
சிஎஸ்கே செய்த தவறு
கிட்டத்தட்ட 24 மணி நேர காத்திருப்புக்கு பின்பு அன்வருக்கு பார்சலின் புகைப்படத்துடன் அதிர்ச்சி செய்தி கிடைத்தது. ஐபிஎல் தொடரில் ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 26ம் தேதியன்று டெல்லிக்கு வந்துள்ளனர். வீரர்களின் தனிப்பட்ட உடமைகளை தவிர மற்ற அனைத்து பொருட்களும் ஹோட்டல் ரூம்களுக்கு கொண்டுச்செல்லப்படும். அப்போது அன்வரின் பார்சலும் தவறுதலாக அதனுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மன உளைச்சல்
பின்னர் ஏப்.27ம் தேதி இரவு ஒரு பார்சல் கூடுதலாக இருப்பதை உணர்ந்த சிஎஸ்கே ஊழியர்கள் உடனடியாக அது குறித்து விசாரித்து அன்வரை தொடர்பு கொண்டது. இதனையடுத்து 28ம் தேதி காலை அவரிடம் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அந்த கருவி இல்லாததால் மருத்துவமனையில் படுக்கையை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தவித்துள்ளனர்.