சுரேஷ் ரெய்னா
சென்னை அணியின் பலம் குறித்து பேசியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஐபிஎல்-ல் மிகவும் வெற்றிகரமான அணி சிஎஸ்கே ஆகும். எப்போதும் சிறப்பாக ஆடும் அந்த அணிக்கு கடந்தாண்டு மோசமாக சென்றது. அதற்கு காரணம் சுரேஷ் ரெய்னா இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த முறை அவர் அணிக்கு திரும்பியுள்ளது புதிய அறிகுறிகளை குறிக்கிறது.
பெரிய குழப்பம்
சென்னை அணி குறித்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு வந்தோம். அந்த அணியில் சிறந்த வீரர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள் எந்த இடத்தில் களமிறங்கினாலும், சிறப்பாக செயல்படாலாம். ஒரு இடத்தை நிரப்ப பல வீரர்கள் உள்ளனர். தற்போது கூட அந்த அணியின் ஓப்பனிங் வீரர்களாக யார் இறங்குவார் என தெரியவில்லை. ஏனென்றால் அந்த அணிக்கு பல ஆப்ஷன்கள் உள்ளன. இதனால் அது சிறந்த அணியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு மோசமானதாக அமைந்தது. 14 போட்டிகளில் விளையாடி வெறும் 6ல் மட்டுமே வெற்றி பெற்றது. சிஎஸ்கேவின் இந்த தோல்விக்கு சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாதது மிகப்பெரும் காரணமாக பார்க்கப்பட்டது. கடந்த சீசனில் கலந்துக்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் வரை சென்ற ரெய்னா பின்னர் தனிப்பட்ட காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறினார்.
ரெய்னா மீது எதிர்ப்பார்ப்பு
ஆனால் இந்தாண்டு சுரேஷ் ரெய்னா மீண்டு அணியுடன் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்ற அவர், மும்பை வந்த பிறகு அணியுடன் சேர்ந்து பயிற்சியை தீவிரப்படுத்திக்கொண்டார். தோனி மற்றும் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சேர்ந்து ஆடும் முதல் தொடர் இதுவாகும். எனவே இருவரும் எந்தவித அழுத்தமும் இன்றி அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.