இந்தியா வருகை
டெல்லி கேபிடல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரபாடாவும், ஆன்ரிச் நார்ட்ஜேவும் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடருக்காக வருகை தந்தனர்.
முதல் பரிசோதனை
இதில் இருவருக்கும் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என்றுதான் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அணியின் பபுளுக்கு செல்வதற்கு முன்னர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு 3 முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற பிசிசிஐ வழிகாட்டுதலின் படி தனிமைப்படுத்தப்பட்டனர்.
தொற்று உறுதி
இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பங்குபெற முடியவில்லை.
மீண்டும் பரிசோதனை
இந்நிலையில் அவருக்கு நிஜமாகவே கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு இன்று எடுக்கப்பட்ட 3வது பரிசோதனையின் முடிவில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும். தவறான பரிசோதனை முடிவு காரணமாக 2 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் எனவும் அந்த அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதே போல அணியின் பபுளிலும் இணைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் நார்ட்ஜே இருந்திருந்தால் பெரிய உதவியாக இருந்திருக்கும். ஆனால் தவறான கொரோனா முடிவால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதற்கு டெல்லி அணி கோபமாக உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி அணிக்கு பலம்
இதுகுறித்து பேசியுள்ளா நார்ட்ஜே, ரூமுக்கு வெளியே வந்து அனைவருடனும் சேர்ந்து காலை உணவு உண்டது மகிழ்ச்சியாக உள்ளது. இன்று முதல் பயிற்சி மேற்கொள்ள ஆர்வமுடன் உள்ளேன். அதே போல மீண்டும் ஐபிஎல் களத்தில் விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். நார்ட்ஜே கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். எனவே டெல்லி அணியின் அடுத்த போட்டியில் இவரை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.