ஐபிஎல் போட்டிகள்
இந்த தொடர் ஒருபுறம் சுவாரஸ்யமாக நடந்து வந்தாலும், சூதாட்டப்பிரச்னை எழுந்துள்ளது. இந்த முறை அதில் சிக்கியிருப்பது பஞ்சாப் அணி வீரர் தீபக் ஹூடா தான். கடந்த 21ம் தேதியன்று பஞ்சாப் கிங்ஸ் மற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
சூதாட்ட புகாரில் வீரர்
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் தீபக் ஹூடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டார். அதில், ஹெல்மட் அணிவது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, நாங்கள் தயார் என குறிப்பிட்டிருந்தார். இது அவர் பஞ்சாப் அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவதை மறைமுகமாக உணர்த்துவது போன்று இருந்தது.
ஐபிஎல் விதிமுறை
ஐபிஎல் விதிமுறைப்படி, ஒரு வீரர் ஆட்டம் தொடர்பாகவோ, பிளேயிங் XI குறித்தோ நேரடியாக அல்லது மறைமுகமாக சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிளேயிங் XI வீரர்களின் விவரங்கள் குறித்து தெரிவிப்பதன் மூலம், சூதாட்டகாரர்களுக்கும், தரகர்களுக்கும் சிக்னல் கொடுப்பது போன்றதாகும். எனவே சூதாட்டக்காரர்களுக்கு சிக்னல் கொடுப்பதற்காக ஹூடா சிக்னல் கொடுத்தாரா என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சூதாட்ட தடுப்பு பிரிவினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
தண்டனை விவரம்
இந்த விவகாரத்தில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் ஐபிஎல் விதிமுறைப்படி ஹூடா, தான் அணியில் இருக்கிறேன் என மறைமுகமாக அறிவித்தது தவறு. எனவே அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக
அபராதம் விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியிடப்படலாம்.