ஐபிஎல் போட்டி
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி, கொல்கத்தா அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 92 ரன்களுக்குள் சுருண்டது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி (5) , டி வில்லியர்ஸ் (0) மேக்ஸ்வெல் (10) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
தோல்வி
பின்வரிசை வீரர்களும் சரியாக விளையாடாத காரணத்தினால், அந்த அணியால் 100 ரன்களை கூட தாண்ட முடியவில்லை. எனவே 19 ஓவர்களில் ஆல் அவுட்டானது. இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் 48 (34) ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 41 (27) ரன்களும் எடுத்தனர். 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் ஆர்சிபி அணி தோல்வியடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
படுகோனேவின் ட்வீட்
இந்நிலையில் ஆர்சிபியின் ஸ்கோர் குறித்து கடந்த 2010ம் ஆண்டு நடிகை தீபிகா படுகோனே போட்ட ட்வீட் இன்று வைரலாகி வருகிறது. 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அனில் கும்ளே தலைமையிலான பெங்களூரு அணி, ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்போது ட்வீட் போட்ட தீபிகா, 92 தானா, இதெல்லாம் ஒரு ஸ்கோரா?, நீங்கள் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் ஆர்சிபி. உங்களுக்காக போட்டியின் ஒவ்வொரு நொடியையும் நேரலையில் பார்த்து வருகிறோம். முன்னேறுங்கள் என பதிவிட்டிருந்தார். எது எப்படியோ அந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுவிட்டது.
விராட் விளக்கம்
ஆனால் இந்தாண்டு போட்டியில் ஆர்சிபி அணி 92 ரன்களை எடுத்த போது தோல்வியை தழுவியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த கோலி, எங்கள் அணியில் பெரும் சொதப்பல் நடந்துவிட்டது. 42 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்திருந்தோம். ஆனால் அடுத்த 20 ரன்களுக்குள் 5 விக்கெட் பறிபோனது. இது நாங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அபாய குரல். அதனை சரி செய்வோம்.