கடின இலக்கு
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட் 64 ரன்களும், டுப்ளசிஸ் 95 ரன்களும் விளாசி சென்னை அணி அதிக ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். பின்னர் வந்த வீரர்களான மொயின் அலி (25), தோனி(17), ஜடேஜா (6) ரன்கள் எடுத்தனர்.
சிறப்பான பவுலிங்
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தீபக் சஹாரின் வேகத்தில் சிக்கி வெளியேறினர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 31 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. கொல்கத்தா அணி 100 ரன்களை தாண்டுவதே கடினம் என அனைவரும் நினைத்த நிலையில் தினேஷ் கார்த்தி - ரஸல் ஜோடி அதனை மாற்றி அமைத்தனர்.
தலைவலி கொடுத்த ஹிட்டர்ஸ்
அணியில் விக்கெட்கள் இல்லை என்ற நிலை இருந்த போதும் அவர்கள் காட்டடி காட்டி அதிரடியாக அணியை மீட்டனர். சிறப்பாக ஆடிய ரஸல் 22 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதே போல தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்களை விளாசினார். இதனால் கொல்கத்தா அணி வெற்றி பாதைக்கு மீண்டும் திரும்பியது. இதன் பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்வது போல விளையாடி ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினார்.
வெற்றி
31 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த கொல்கத்தா அணி பேட் கம்மின்ஸ் அதிரடியால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. எனினும் சாதூர்யமாக செயல்பட்ட தோனி, பேட் கம்மின்ஸை விட்டுவிட்டு மறுபுறம் இருந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேற்றினார். இதனால் 19.1 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 10 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட் கம்மின்ஸ் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஒன்றும் செய்ய முடியாது
இந்த பரபரப்பான ஆட்டம் குறித்து பேசிய தோனி, ஆட்டத்தின் 16வது ஓவர் முதல் ஆட்டம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் - பேட்ஸ்மேன்களுக்கும் இடையேயான போட்டியாக மாறியது. அதில் ஒரு புறம் சிறப்பாக செயல்பட்டு விட்டது. ரஸல் - கம்மின்ஸ் சிறப்பாக ஆடினர். அந்த கட்டத்தில் வித்தியாசமான பீல்டிங்கை நிற்க வைக்க முடியாது. எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அதுதான் வெற்றி பெறும். ஆனால் அவர்களிடம் அனைத்து விக்கெட்களும் வீழ்ந்துவிட்டது, இல்லையென்றால் போட்டி வேறு மாதிரி சென்றிருக்கும்.
அறிவுரை
கிரிக்கெட்டில் நிறைய அனுபவப்பட்டுள்ளோம். எப்போதும் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் நல்ல ஸ்கோரை அடித்துவிட்டால் எதிரணியால் அதை துறத்த முடியாது என்று எதுவும் இல்லை. வீரர்கள் நல்ல ஸ்கோரை அடித்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் இருக்க கூடாது.
கணிவுடன் இருங்கள்
நீங்கள் முதலில் நிறைய விக்கெட்களை எடுத்தாலும், பின்னர் பெரிய ஹிட்டர்ஸ் வருவார்கள். அவர்கள் அடித்துதான் ஆடுவார்கள். இந்த களத்தில் ஜடேஜா தான் அவர்களுக்கு அடித்து ஆட கிடைக்கும் ஒரே பவுலர். அதை மாற்ற முடியாது. நம்மால் அதை எதுவும் செய்ய முடியாது எனவே எப்போது சாந்தமாக கணிவாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.