துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது பேட்டிங் திறனை முன்பை விட சிறப்பாக மேம்படுத்தி இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், அமீரகத்தில் நாளை (செப்.19) முதல் மீண்டும் தொடங்குகிறது.
இரவு 7:30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் மும்பை அணி நான்காம் இடத்தில் உள்ளது. கைவசம் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் முன்னேற, குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது அந்த அணி வெற்றிப் பெற்றாக வேண்டும். 5ல் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் இடம் உறுதியாகும். தொடரின் முதல் பாதியில், சென்னை அணியை மும்பை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை நிர்ணயித்த 218 ரன்கள் இலக்கை கடைசி ஓவர், கடைசி பந்தில் எட்டிப் பிடித்து வென்றது மும்பை. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா கடுமையாக பரவ, இதனால் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட, அந்த களேபரத்துக்கு மத்தியில், இந்த தோல்வி அதிகம் கவனம் பெறாமல் போனது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. எட்டு அணிகளில் அதிக ரன் ரேட் வைத்திருக்கும் அணி சென்னை தான். இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிடலாம். இந்த சூழலில் தான் இந்த இரண்டாம் பகுதியில் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது சென்னை.
சென்னை அணியில் காயம் காரணமாக டு பிளசிஸ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அதேபோல், குவாரண்டைனில் இருக்கும் சாம் கர்ரனும் இப்போட்டியில் விளையாட மாட்டார். எனவே சிஎஸ்கே-வில் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (c & wk), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி ங்கிடி, ஜே ஹேசில்வுட் ஆகியோர் இடம் பிடிக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் ஷர்மா (c), குயின்டன் டி காக் (wk), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல்/ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020 சீசனிலும் சரி.. இந்த சீசனிலும் சரி.. சென்னை அணியின் ஒரே சொதப்பல் தோனியின் பேட்டிங் மட்டும் தான். இதுவரை விளையாடிய அனைத்து தொடர்களிலும் தோனியின் ராக்கெட் சிக்ஸர்களால் பல போட்டிகளை வென்று குவித்தது சிஎஸ்கே. ஆனால், கடந்த சீசனில் அவரது பேட்டிங் குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், 'ஒர்ஸ்ட்' எனலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்று விட்டதால், அவரால் சரிவர பந்துகளை கனெக்ட் செய்ய முடியவில்லை என்பதே உண்மை. இந்த சீசனிலும் முதல் பாதியில் அவர் அதே மாதிரி தான் தடுமாறினார். அதே 'கனெக்ட்' ப்ராப்ளம் தான். கடந்த 2020 சீசனில் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 200 ரன்களே அவர் எடுத்தார். அதனால், சென்னை அணி பிளே ஆஃப் முன்னேற முடியாமல் தொடரை விட்டே வெளியேறிவிட்டது. இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் தோனி 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில், இப்போது மீண்டும் அவர் சொதப்பிய அதே அமீரக ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், தோனி வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதாவது, ஒருநாளைக்கு 3-4 மணி நேரம் பேட்டிங்கிற்கு என்று மட்டும் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில், தோனி சரமாரியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "ஆல் ஏரியாவிலும் தல" என்ற கேப்ஷனோடு வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், மைதானத்தின் நாலாபுறமும் தோனி பந்துகளை பறக்கவிட்டுள்ளார். குறிப்பாக அவரது "கனெக்ட்" அதாவது, பந்தை தனது பேட்டில் அவர் மீட் பண்ணும் டைமிங் அற்புதமாக இருந்தது. போட்டிகளின் போதும் தோனி இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால், சென்னைக்கு நான்காவது முறையாக கோப்பை செர்வ் செய்யப்படலாம்!.
'சம்பவம் இருக்கு’ பயிற்சியில் காட்டுத்தனமாக சிக்ஸர் விளாசும் தோனி.. புதிய வீடியோவால் ரசிகர்கள் குஷி