ஐபிஎல் போட்டி
ஆனால் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்தனர். கடந்த வியாழக்கிழமை வரை அமீரகத்திற்கு வருவதாக கூறிவந்த இவர்கள், சனிக்கிழமையன்று திடீரென வரப்போவதில்லை என தெரிவித்துவிட்டனர். இதனால் அவசர அவசரமாக மாற்று வீரர்களை தேடிப் பிடித்துள்ளது பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள்.
என்ன காரணம்
சமீபத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதியானதால், 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் கொரோனா விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல், ஊர்சுற்றியதால்தான் கொரோனா பரவியது என இங்கிலாந்து வீரர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தது. இதற்காக தங்களில் அதிருப்தியை வெளிப்படுத்த பேர்ஸ்டோ, மலான், வோக்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
வோக்ஸ் விளக்கம்
இந்நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து கிறிஸ் வோக்ஸ் வெளிப்படையாக கூறியுள்ளார். டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ், நான் தொடர்ந்து நீண்ட நாட்கள் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கவேண்டிய நெருக்கடி நிலைமை இருக்கும் என்பதால் தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினேன்.
அடுத்தடுத்து தொடர்கள்
அடுத்தாக வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் கிறிஸ் வோக்ஸின் பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே அதற்கான பயோ பபுளிலும் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதன் பிறகு ஆஷஸ் தொடரும் உள்ளது. எனவே இதன் காரணமாக ஏதாவது ஒரு தொடரில் இருந்து விலக நினைத்தேன். ஐ.பி.எல் தொடரில் கலந்துகொண்டால் குறைந்த நாட்களில் அதிக போட்டிகளில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த காரணமாகவே ஐபிஎல் தொடரை விளையாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு எடுக்காவிட்டால் அடுத்து வரும் எந்த போட்டியிலும் நான் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதனாலேயே முன்னெச்சரிக்கையாக ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்ததாக கிரிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.