கடின இலக்கு
சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். ருதுராஜ் கெயிக்வாட் காட்டிய அதிரடியால் சிஎஸ்கே அணி முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் சேர்த்தது. கெயிக்வாட் 32 ரன்கள், டூப்ளசிஸ் 86 ரன்கள், உத்தப்பா 31 ரன்கள், மொயீன் அலி 37 ரன்கள் என அடுத்தடுத்து அதிரடி காட்ட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது.
உதவிய தோனி ப்ளான்
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஜோடி ஆகியோர் நிச்சயம் தலைவலி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே வெங்கடேஷ் ஐயரை முன்கூட்டியே விக்கெட் எடுப்பதற்காக ஜோஸ் ஹாசல்வுட்டை 2வது ஓவருக்கு கொண்டு வந்தார். அதில் நல்ல பலனும் கிடைத்தது.
தோனி செய்த தவறு
2வது ஓவரின் 3வது பந்தில் ஹாசல்வுட் திடீரென பவுன்சர் பந்து மூலம் தாக்குதல் நடத்தினார். அந்த பந்தை எதிர்பார்காத வெங்கடேஷ் ஐயர் சற்று தாமதமாக செயல்பட பந்து எட்ஜானது. ஸ்டம்ப்பிற்கு பின்னால் எம்.எஸ்.தோனி இருப்பதால் நிச்சயம் விக்கெட் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த கேட்சை தவறவிட்டு அதிர்ச்சி கொடுத்தார் தோனி. அவர் கேட்ச்-ஐ மட்டும் பிடித்திருந்தால் வெங்கடேஷ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறியிருப்பார்.
வெங்கடேஷ் ஐயரின் அதிரடி
ஆனால் தோனி தவறவிட்ட அந்த கேட்ச், சிஎஸ்கேவுக்கு எமனாக மாறியது. தனக்கு கிடைத்த 2வது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வெங்கடேஷ் ஐயர் சிஎஸ்கே பவுலர்களுக்கு தலைவலி கொடுத்தார். இதனால் தொடக்கத்திலேயே தடுமாற வேண்டிய கொல்கத்தா 32 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் அரைசதம் கடந்தார். இதனால் அந்த அணி முதல் விக்கெட்டிற்கு 91 ரன்களை சேர்த்தது. தோனியிடம் தப்பித்த வெங்கடேஷ் ஐயர் ஷர்துல் தாக்கூரிடம் சிக்கி 50 ரன்களுக்கு அவுட்டானார். தோனி செய்த அந்த தவறு கொல்கத்தா அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.