அதிரடி தொடக்கம்
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெயிக்வாட் - டூப்ளசிஸ் ஆகியோர் கொல்கத்தா அணிக்கு தலைவலி கொடுத்தனர். முதலில் ருதுராஜ் கெயிக்வாட் தான் அதிரடியை தொடங்கினார். 27 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்களை விளாசினார். இதனால் முதல் விக்கெட்டிற்கு சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது.
மீண்டும் மிரட்டிய உத்தப்பா
இதன் பிறகு களமிறங்கிய ராபின் உத்தப்பா முதல் பந்து முதலே மிரட்டினார். 15 பந்துகளில் 31 ரன்களை குவித்து அவர் வெளியேறினார். உத்தப்பாவின் விக்கெட்டிற்கு பிறகு டாப் கியருக்கு மாற்றிய டூப்ளசிஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலியும் மறுமுணையில் தனது ருத்ர தாண்டவத்தை காட்டினார்.
இலக்கு
இதனால் 13 ஒவொஅர்களில் 124 ரன்கள் எடுத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்களில் 172 ரன்களை குவித்தது. எனினும் அவர்கள் இருவரையுமே கொல்கத்தா அணியால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. 59 பந்துகளை சந்தித்த டூப்ளசிஸ் 7 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். இதே போல 20 பந்துகளை சந்தித்த மொயீன் அலி 37 ரன்களை சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்துள்ளது.
வெற்றி பெறுமா?
துபாய் மைதானத்தில் பொதுவாக 2வதாக பேட்டிங் ஆடும் அணிதான் 80 சதவீதம் வரை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முதலில் பேட்டிங் ஆடும் அணி 170+ ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தால் அதுவே மிகவும் கடினமான இலக்காகும். எனவே கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருப்பதாக தெரிகிறது.