9ஆவது முறையாக இறுதிப் போட்டியில் சிஎஸ்கே
அதன்படி கடந்த மாதம் துபாயில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில், அது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெற்றிருந்த டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதில் முதலாவது குவாலிபயர் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சென்னை அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இது 9ஆவது முறையாகும்.
2ஆவது குவலிபயர்
அதைத் தொடர்ந்து ஷார்ஜியாவில் நடைபெற்ற எலிமினெட்டர் போட்டியில் பெங்களூரு அணியை கேகேஆர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து புதன்கிழமை 2ஆவது குவலிபயர் போட்டி மீண்டும் ஷார்ஜியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 135 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இறுதிப் போட்டியில் கேகேஆர்
எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்குச் சிறப்பான ஒரு தொடக்கம் கிடைத்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் கேகேஆர் அணி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க தொடங்கினர். குறிப்பாக, 18ஆவது ஓவரின் இறுதி பந்தில் தொடங்கி அடுத்த 11 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கேகேஆர் இழந்தது. தினேஷ் கார்த்திக், கேப்டன் இயன் மார்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரேன் ஆகியோர் டக்அவுட் ஆகினர். கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், 5ஆவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு கேகேஆர் அணியின் வெற்றியை உறுதி செய்தார் ராகுல் திரிபாதி.
2ஆவது முறை
இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் 3ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் முடித்த அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 2ஆவது முறையாகும். முன்னதாக கடந்த 2012இல் சிஎஸ்கே லீக் சுற்றில் 4ஆம் இடம் பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதேநேரம் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஒரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போவது இது 3ஆவது முறையாகும். இதே டெல்லி அணி கடந்த 2012ஆம் ஆண்டும், குஜராத் அணி 2016ஆம் ஆண்டும் இதுபோல வெளியேறியிருந்தது.
சிஎஸ்கே vs கேகேஆர்
கேகேஆர் அணி தான் விளையாடி இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் வெற்றி வாகைசூடியுள்ளது. அதேநேரம் இதுவரை 8 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 முறை ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது. இந்த 2 அணிகளும் 2012ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதின. அதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 190 ரன்களை எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய கேகேஆர் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2 பந்துகள் மீதம் இருக்க 192 ரன்களை எடுத்து கேகேஆர் வென்றது. இந்தச் சூழலில் 2ஆவது முறையாக இந்த 2 அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. வரும் அக்.15ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா!