ஐபிஎல் போட்டிகள்
நாளை தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் பரம எதிரிகள் போன்று பார்க்கப்படுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த அணிகளின் வீரர்கள் அமீரகத்திற்கு சென்றுவிட்டனர். அயல்நாட்டு வீரர்களும் அணி பபுளுடன் இணைந்து வருகின்றனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இது ஒருபுறம் இருக்க இந்தாண்டு ஐபிஎல் தொடரில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்றும் யார் கோப்பையை வெல்வார்கள் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் பாதி வரை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கோப்பைகளை வென்று ராஜாவாக இருக்கும் மும்பை அணி இந்தாண்டும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கெவின் பீட்டர்சன் அட்வைஸ்
இந்நிலையில் மும்பை மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற கேள்விக்கு இங்கிலாந்து மூன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர், ஐபிஎல்-ல் ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, எப்போதுமே நன்றாக விளையாட வேண்டும் என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அந்த அணி எப்போதும் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துவிட்டு, கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடும். இதுவரையிலான சீசன்களில் இதுதான் நடந்துள்ளன.
கடைசி 6 போட்டிகள்
தற்போது 14ஆவது சீசனின் பாதியை நாம் கடந்துவிட்டோம். இதில் மும்பை
அணிக்கு 7 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. வழக்கமாக முதல் சில ஆட்டங்களில் சொதப்புவது போல இரண்டாவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலும் தோல்வியடைந்தால், அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். அதன்பிறகு கம்பேக் கொடுக்க போதுமான போட்டிகள் கிடையாது.
பீட்டர்சன் எச்சரிக்கை
மீதம் இருக்கும் தொடரில் மும்பை அணி இன்னும் 3 போட்டிகளில் தோற்றாலே பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டு விடும். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் பந்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்த வேண்டும். வழக்கம்போல், பொறுமையாக பார்த்துக்கொள்ளலாம் என இருந்தால் பிளே ஆஃப் செல்ல முடியாது என அட்வைஸ் கூறியுள்ளார்.