பஞ்சாப் சொதப்பல்
முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் மட்டுமே 31 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் 47 பந்துகளில் 66 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்.
தொடர் விமர்சனம்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரண் போன்ற அதிரடி வீரர்கள் இருந்த போதும் அந்த அணியின் சொதப்பலால் 123 ரன்கள் மட்டுமே எடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செய்யும் தவறுகளால் பின்னர் வரும் பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் போடப்படுகிறது என்றும் அதனால் அவர்கள் எளிதாக அவுட்டாகி விடுகிறார்கள் என்று விமர்சனங்கள் எழுகிறது.
சேவாக் குற்றச்சாட்டு
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சேவாக், பஞ்சாப் அணியில் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகச் சிறப்பான செயல்பட்டனர். ஆனால், பேட்டிங் வரிசை மிக மோசமாக உள்ளது. பவர் ஹிட்டர்ஸான கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் போன்றவர்கள் சிறப்பான தொடக்கத்தை பெறுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோரை கொண்டு செல்வார்கள்.
பவர் ஹிட்டர்ஸ்
ஓப்பனிங் வீரர்கள் நிதானமாக விளையாடுவதுதான் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பிரஷரை ஏற்றுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பாருங்கள். அவர்களின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. அணியின் ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்துகிறார்கள். பஞ்சாப் அணியும் இப்படிதான் செயல்பட வேண்டும். ஒரேயொரு வீரரை மட்டும் நம்பியிருக்கக் கூடாது.
ஓப்பனர்ஸ் உணரவேண்டும்
தொடக்க வீரர்கள், நாம் பொறுமையாக ஆடி பவர் பிளே வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டால் பின்னர் வரும் கெயில், நிக்கோலஸ் பூரண் போன்றவர்கள் அதிரடி காட்டுவார்கள் என நம்புகிறார்கள். ஓப்பனர்கள் நிதானமாக விளையாடுவதால் பின்னர் வரும் வீரர்களுக்கு பிரஷர் ஏற்படுகிறது என்பதை உணரவேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.