கொல்கத்தா
ஐபிஎல் தொடரில் கம்பீரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வந்த கொல்கத்தா அணி, கம்பீரின் ஓய்வுக்கு பிறகு மிகவும் மோசமாக தடுமாறி வருகிறது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக அணியின் செயல்பாடுகள் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ரோஹித் சர்மா(5) மற்றும் தோனி(3) ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் கம்பீர்(2) ஆவார்.
சிறந்த கேப்டன்
சர்வதேச போட்டிகளிலும் முன்னாள் கேப்டன் தோனிக்கு நிகரான கேப்டன்சி திறமைகளை கொண்டிருந்தவர் கவுதம் கம்பீர் என வல்லுநர்கள் பலரும் பாராட்டியிருந்தார்கள். ஆனால் வெகு சில போட்டிகளிலேயே அவருக்கு கேப்டன்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பதிலடிகளை ஐபிஎல் மூலம் கொடுத்தார். இந்நிலையில் தான் கேப்டனாக இருந்த போது சிறப்பாக விளையாடிய வீரர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என தற்போது கவலை தெரிவித்துள்ளார்.
கம்பீர் கவலை
தற்போது மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணியில் கம்பீருக்கு கீழ் 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை செயல்பட்டார். பின்னர் கொல்கத்தா அணி அவரை கைவிட்டுவிட மும்பை அணி வாங்கியது. இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், சூர்யகுமார் போன்ற சிறந்த வீரரை 3ம் வரிசையில் இறக்காததற்காக நான் வருந்துகிறேன். மணிஷ் பாண்டே, யூசுஃப் பதான் ஆகிய வீரர்கள் இருந்ததால், சூர்யகுமாரை ஃபினிஷராக மட்டுமே பயன்படுத்தினோம். அவரை சரியாக பயன்படுத்தியிருந்தால் 400 - 600 ரன்களை வரை குவித்திருப்பார்.
பெரும் இழப்பு
ஐபிஎல் தொடரில் பல்வேறு வீரர்கள், ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாறியுள்ளனர். அது சகஜமான ஒன்று. ஆனால் சூர்யகுமார் யாதவின் விஷயம் அப்படியில்லை. சூர்யகுமார் யாதவ் கேகேஆரை விட்டு வெளியேறியது அந்த அணிக்குதான் மிகப்பெரிய இழப்பு. சூர்யகுமார் யாதவ் கேகேஆரை விட்டு வெளியேற அனுமதித்திருக்கக்கூடாது என கம்பீர் பேசியுள்ளார்.
சூர்யகுமாரின் பயணம்
சூர்யகுமார் யாதவ் முதன் முதலில் கடந்த 2012ம் ஆண்டு மும்பை அணிக்காக தான் விளையாடினார். அங்கு ஒரே ஒரு போட்டியில் தான் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர் கடந்த 2014ம் ஆண்டு கொல்கத்தா அணியில் இணைந்தார். அந்த அணிக்காக 54 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாடினார். பின்னர் மீண்டும் 2017ம் ஆண்டு மும்பை அணி அவரை ரூ.3.2 கோடிக்கு வாங்கி 3வது வீரராக பயன்படுத்தி வருகிறது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.