தோனி கொடுத்த ஷாக்
வழக்கமாக 6-7 வீராக களமிறங்கும் கேப்டன் தோனி நேற்றைய போட்டியில் மொயின் அலி அவுட்டான பிறகு 2 வது விக்கெட்டிற்கு களமிறங்கி ஆச்சரியமளித்தார். அதுமட்டுமல்லாமல் தான் சந்தித்த 2வது பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். அவர் 8 பந்துகளில் வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினாலும், 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை அடித்து பந்தை வீணாக்காமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
பழைய ஃபார்மில் தோனி
குறிப்பாக தோனி அடித்த அந்த ஒற்றை சிக்ஸர், ரசிகர்களுக்கு மீண்டும் பழைய தோனியை கண்முன்னே காட்டியது. நன்றாக ஆடி வந்த அவர் ரஸல் வீசிய பந்தில் கீப்பிங்கில் இருந்த கேப்டன் மோரகனின் டைமிங் கேட்சால் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் இனி தோனியின் அதிரடியை காணலாம் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கவாஸ்கர்
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், இந்தியா முழுவதும், தோனியின் பேட்டிங்கை விரும்பி பார்த்தது சிறப்பான தருணம். அவர் எந்த அளவிற்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு பெறுகிறாறோ, அந்த அளவிற்கு அதிரடி காட்டுவார். எனவே வரும் நாட்களில் தோனி 4 - 5வது வீரராக களமிறங்குவார் எனில் அவரிடம் இருந்து நிறைய சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை காணலாம்.
தோனியின் ப்ளான்
தோனி முன்கூட்டியே களமிறங்கியது குறித்து பேசிய அவர், தோனிக்கு ஆட்டத்தின் சூழல் நன்கு புரிந்துள்ளது. தொடக்க விரர்கள் காட்டிய அதிரடியை தோய்வின்றி தொடர்ந்து காட்ட வேண்டும். அதற்கு ரெய்னா, ஜடேஜா அம்பத்தி ராயுடு ஆகியோரை விட தோனிதான் அங்கு கண்டிப்பாக தேவை என்பதை தெரிந்துவைத்துள்ளார். சென்னை அணியின் ஸ்கோரின் வேகம் குறைந்து விடக்கூடாது என்பதில் தோனி உறுதியாக இருந்தார். அதற்காக சிறிய அதிரடி காட்டி சென்றார் என தெரிவித்துள்ளார்.
அறிவுறுத்தல்
சிஎஸ்கேவின் ஸ்கோரை உயர்த்த கேப்டன் எம்.எஸ்.தோனி முன்கூட்டியே 4-5வது வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் கூறிவந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்காத வகையில் நேற்று அந்த ப்ளானை செயல்படுத்தி அசத்தியுள்ளார் தோனி. எனவே வரும் நாட்களிலும் தோனி முன்கூட்டியே களமிறங்குவதை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.