3வது போட்டி
ஐபிஎல் தொடரில் இதுவரை 2 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இதுவரை 2 முறை கோப்பை வென்றுள்ள கொல்கத்தா அணியை 1 முறை கோப்பை வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி எதிர்கொள்கிறது. கடந்தாண்டு கொல்கத்தா அணி மோசமாக செயல்பட்டதால் தொடரின் பாதியிலேயே கேப்டன்சி மோர்கனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவரின் தலைமையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
அயல்நாட்டு வீரர்கள்
போட்டி நெருங்கி வரும் நிலையில் கொல்கத்தா அணியின் வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும். அதன்படி கேப்டன் மோர்கன் கண்டிப்பாக ஒரு இடத்தை எடுத்துக்கொள்வார். அடுத்ததாக பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இடம்பெறுவார். அணியில் இருக்கும் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சு செய்யும் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசுல் கண்டிப்பாக அணியில் இடம்பெறுவார்.
யாருக்கு வாய்ப்பு
பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என மூன்று வீரர்கள் இடம்பெற்றதால் 4வது இடத்திற்கு சுனில் நரைன் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று போட்டி நடைபெறும் சென்னை மைதானம் ஸ்பின்னர்களுக்கு உதவக்கூடிய ஒன்று. எனவே சுனில் நரைன், சகிப் அல் ஹசன் இருவருமே பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். இதனால் யாருக்கு வாய்ப்பு என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
சகிப்
வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் ஐபிஎல்-ல் 2011 முதல் 2017ம் ஆண்டு வரை கொல்கத்தா அணியில் தான் செயல்பட்டார். பின்னர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு சென்ற அவர், இந்தாண்டு மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பியுள்ளார். அவரின் தேவை அதிகம் இருப்பதால்தான் ரூ. 3.2 கோடிக்கு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.