லண்டன்: கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், 19ம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, மான்சஸ்டரில் இன்று (செப்.10) தொடங்கவிருந்தது.
இத்தொடரில் இந்தியா 2-1 என்று முன்னிலையில் இருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது
இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகத்தில் பரவும் கொரோனா தொற்று காரணமாக, கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில், இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்து அணியை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ஆனால், கொரோனா எனும் கோர முகம் மீண்டும் தனது வேலையைக் காட்ட, தொடரை முழுமையாக முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
முன்னதாக, லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசியோதெரஃபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் இந்திய வீரர்கள் நெருங்கி பணியாற்றியதால், இந்திய அணியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் வீரர்கள் யாருமே நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இரு அணி நிர்வாகங்களும் நேற்று முதல் தொடர்ந்து ஆலோசித்து வந்தன. அதேசமயம், இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும், 5 வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முதலில் அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது குறித்த மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்போம்' என்று குறிப்பிட்டிருந்தது. இதன் பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 5 வது டெஸ்ட் போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளது. BCCI மற்றும் ECB இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எப்படியாவது நடத்த பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும், இந்திய அணி நிர்வாகத்தில் கோவிட் -19 பரவுவதால், இந்த டெஸ்ட் போட்டியை நிறுத்தும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
பிசிசிஐ மற்றும் இசிபி இடையே உள்ள வலுவான உறவின் காரணமாக, ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டியை வேறு தேதியில் நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரியங்களும் இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்த ஒரு சரியான நேரத்தை கண்டறியும். பிசிசிஐ எப்பொழுதும் வீரர்களின் பாதுகாப்பில் எந்த காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாது. இந்த கடினமான காலங்களில் எங்களுடன் ஒத்துழைத்து, நிலைமையை புரிந்து கொண்டதற்காக ECB க்கு BCCI நன்றி தெரிவிக்கிறது. ஒரு சுவாரஸ்யமான தொடரை முடிக்க முடியாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ரூ.300 கோடி வருவாய் இழப்பு.. ஈடுகட்டுவதற்காக மீண்டும் சுற்றுப்பயணம்? வெளியான பிசிசிஐ-ன் ப்ளான்!
இந்நிலையில், வரும் செப்.19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டியில், வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்து அரசின் கொரோனா விதிமுறைகளின்படி, தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்" என்பது கட்டாயம். ஸோ, ரவீந்திர ஜடேஜா, ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகிய வீரர்கள் அந்த போட்டியில் கலந்து கொள்வது சந்தேகமே. குறிப்பாக, மும்பை அணி கேப்டன் ரோஹித் மற்றும் அணியின் முக்கிய பவுலர் பும்ரா இல்லாமலும் சென்னை அணியை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.