ஐபிஎல் தொடர்
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ளது.
27 நாட்கள் விண்டோ
இதற்கு முன்னர் 10 டபுள் ஹெட்டர்ஸ் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அமீரகத்தில் கடும் வெயில் இருக்கும் என்பதால் டபுள் ஹெட்டர்ஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே போட்டி நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் உள்ள 31 போட்டிகளை, 27 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்தும் அமீரக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ரசிகர்களுக்கு அனுமதி
இந்நிலையில் அமீரகத்தில் கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்பதால், பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட அளவில் தான் இருக்கைகள் ஒதுக்கப்படும். இதனால் பிசிசிஐ-ன் வருமானம் இன்னும் கூடவுள்ளது. குறிப்பாக இறுதிப்போட்டி நடைபெறும் அக்.15ம் தேதி இந்தியாவில் தசரா திருவிழாவாகும். அதே போல அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் அமீரகத்தில் விடுமுறை தினம். எனவே கூட்டம் அதிகளவில் கூட வாய்ப்புள்ளது.
அதிகரிக்கும் வருமானம்
மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடித்துவிட்டால் பிசிசிஐ-க்கு ரூ.2500 கோடி வரை வருமானம் கிடைக்கும். இந்த தொகையானது தற்போதைக்கு போட்டு வைத்துள்ள திட்டமாகும். அனைத்து போட்டிகளும் பார்வையாளர்களுடன் நடைபெற்றால், இந்த தொகையில் பெரும் மாற்றம் ஏற்படும். பிசிசிஐ-க்கு நினைத்ததை விட அதிக வருமானம் கிடைக்கும்.